/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
படுக்கை வசதி இல்லாமல் நோயாளிகள் அவதி
/
படுக்கை வசதி இல்லாமல் நோயாளிகள் அவதி
ADDED : நவ 02, 2025 04:28 AM
சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை தாய் வார்டில் போதிய படுக்கை வசதி இல்லாமல் சிரமப் படுகின்றனர்.
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் 800 படுக்கை வசதியுடன் உள் நோயாளிகள் பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய தாய் வார்டு, மகப்பேறு, குழந்தைகள் சிகிச்சை செயல்படுகிறது.
தினசரி புற நோயாளி பிரிவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வருகின்றனர். தினசரி உள்நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. எலும்பு பாதிப்பு, வயிறு கோளாறு, பெண்களுக்கு கர்ப்பப் பையில் கட்டி போன்ற பாதிப்பிற்கு அறுவை சிகிச்சை செய்வோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.
24 மணி நேரமும் செயல்படக்கூடிய தாய் வார்டில் சிவப்பு மண்டலத்தில் 10 படுக்கையும், மஞ்சள் மண்டலத்தில் 9 படுக்கையும் தான் இருக்கிறது.
விபத்து உள்ளிட்ட அவசர சிகிச்சைக்கு வருபவர்களுக்கு முதலில் அவர்களுக்கான முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் வார்டுக்கு மாற்றப்படுகின்றனர்.
தாய்வார்டிற்கு சராசரியாக தினசரி 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கு வருகின்றனர். இவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதுமான படுக்கை வசதி இல்லாததால் 2 பேரை ஒரே பெட்டில் அமர வைத்து முதலுதவி சிகிச்சை அளித்து பின்னர் வார்டுக்கு மாற்றுகின்றனர்.
நோயாளிகளுக்கு சிரமம் ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர். எனவே தாய்வார்டை கூடுதல் படுக்கை வசதி உள்ள பகுதிக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
மருத்துவக் கல்லுாரி நிர்வாகத்தினர் கூறுகையில், 50 படுக்கை வசதியுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட தீவிர சிகிச்சைப்பிரிவிற்கு புதிய கட்டடம் கட்டப்பட்டு டிச. மாத்திற்குள் திறக்கப்பட உள்ளது. அந்த கட்டடம் பயன்பாட்டிற்கு வந்தவுடன் இந்த பிரச்னை இருக்காது என்றனர்.

