/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பட்டா மாற்றம், சான்றுக்கு மக்கள் அலைக்கழிப்பு
/
பட்டா மாற்றம், சான்றுக்கு மக்கள் அலைக்கழிப்பு
ADDED : ஜூலை 09, 2025 08:10 AM
சிவகங்கை : சிவகங்கை கோட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா பெயர் மாற்றம், திருத்தம், பிறப்பு ,இறப்பு சான்று பெறுதல் உட்பட பல்வேறு தேவைக்காக செல்லும் மக்களை அலைக்கழிப்பதாக புகார் எழுந்துள்ளது.
சிவகங்கை கோட்டாட்சியர் அலுவலகத்தின் கீழ் சிவகங்கை, காளையார்கோவில், திருப்புவனம், இளையான்குடி ஆகிய 4 தாசில்தார் அலுவலகங்களும், அதன் கீழ் செயல்படும் ஆர்.ஐ., வி.ஏ.ஓ.,க்கள் அலுவலகங்களை கண்காணிக்கும் பணியை கோட்டாட்சியர் மேற்கொள்ள வேண்டும்.
உரிய காலத்தில் பிறப்பு, இறப்பு சான்று பெற முடியாதவர்கள் சிவகங்கை கோட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்து சான்று பெற முயற்சிக்கின்றனர்.
இங்கு போதிய உதவியாளர்கள் இருந்தும் பிறப்பு, இறப்பு சான்று வழங்க பல மாதங்கள் இழுத்தடிப்பதாக புகார் எழுந்துள்ளது.
குறிப்பாக 4 தாலுகாவிற்குட்பட்ட மக்கள், விவசாயிகள் தங்கள் நிலத்தில் பட்டாவில் உள்ள பெயர்களை மாற்றுதல், வரைபடம் திருத்தம் செய்தல், புதிதாக பட்டா பெறுதல் உட்பட நிலம் சார்ந்த அனைத்து பிரச்னைக்கும் தீர்வு காண மக்கள் சிவகங்கை கோட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கின்றனர்.
பணிகளை முடித்து சான்று வாங்குவதற்குள் மக்கள் வீட்டிற்கும், கோட்டாட்சியர் அலுவலகத்திற்கும் நடையாய் நடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து பாதிக்கப்பட்ட மக்கள் கோட்டாட்சியரிடம் பல முறை புகார் செய்தாலும், அவர் சம்பந்தப்பட்ட உதவியாளரை கண்டிக்கிறாரே தவிர, பணி முடித்து கொடுத்து விட்டார்களா என ஆய்வு செய்வதில்லை.
கலெக்டர் பொற்கொடி, சிவகங்கை கோட்டாட்சியர் அலுவலகத்தில் நிலுவையில் உள்ள அனைத்து பட்டா பெயர் மாறுதல், திருத்தம், பிறப்பு இறப்பு சான்று குறித்து தனியாக ஆய்வு நடத்தி நடவடிக்க எடுக்க வேண்டும்.