/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தண்ணீர் இருந்தும் விவசாயத்தை கைவிட்ட மக்கள்
/
தண்ணீர் இருந்தும் விவசாயத்தை கைவிட்ட மக்கள்
ADDED : டிச 28, 2024 07:52 AM
சிங்கம்புணரி:  சிங்கம்புணரி அருகே தண்ணீர் இருந்தும் 200க்கும் மேற்பட்ட ஏக்கர் பாசன நிலங்கள் சாகுபடி நடைபெறாமல் தரிசாக  விடப்பட்டுள்ளது.
இவ்வொன்றியத்தில் மல்லாக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பாசன நிலங்கள் உள்ளன. ஒரு காலத்தில் இப்பகுதி வயல்களில் மூன்று போகம் வரை நெல் சாகுபடி நடந்தது. தற்போது தொடர்ந்து இங்குள்ள ஆறு, கண்மாய்களில் முழு அளவில் தண்ணீர் வந்தும் விவசாய பணிகள் நடைபெறவில்லை. இதனால் 200க்கும் மேற்பட்ட ஏக்கர் பாசன நிலங்கள் உயிர்ப்பு குறைந்து தரிசாகி வருகிறது.
நிலங்களை வைத்திருக்கும் பலர் பல்வேறு நகரம், நாடுகளுக்கு தொழில் நிமித்தமாக சென்று வருகின்றனர். இது தவிர விவசாயப் பணிகளுக்கு ஆட்கள் கிடைப்பது, கட்டப்படாமல் திறந்து விடப்பட்ட மாடுகள் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களும் இருக்கிறது. இதனால் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் விவசாயம் நடைபெறவில்லை. விவசாயம் செய்ய ஆர்வமுள்ள சிலரும் மற்ற வயல்கள் தரிசாக இருப்பதால் தண்ணீரை தேக்கிக் கொண்டு வந்து சரிப்படுத்த முடியாமல் தவிக்கின்றனர்.
இதே நிலை நீடித்தால் வயல்கள் அனைத்திலும் உயிர்ச்சத்து குறைந்து வளமை மாறிவிடும். பாசன நிலங்களின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு வேளாண் துறையினர் இப்பகுதியில் ஆய்வு செய்து மீண்டும் சாகுபடி பணிகளை துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

