ADDED : ஜூலை 15, 2025 03:42 AM

சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதால் நோயாளிகள் டாக்டர்கள் சிரமப்படுகின்றனர்.
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் தினசரி புற நோயாளிகளாக 1000க்கும் மேற்பட்டோரும் உள்நோயாளிகளாக 800 பேரும் சிகிச்சையில் உள்ளனர். தீவிர சிசிச்சை பிரிவு, குழந்தைகள் நலப் பிரிவு, மகப்பேறு பிரிவு, எலும்பு முறிவு, டயாலிசிஸ் பிரிவு உள்ளிட்ட பிரிவுகள் செயல்பட்டு வருகிறது.
மருத்துவமனையின் மின் விநியோகத்திற்காக 2 மின் மாற்றிகள் உள்ளது. மின் தடையானால் அதை சமாளிக்க 3 ஜெனரேட்டர்கள் உள்ளது.அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கப்படவேண்டும் என அரசு உத்தரவுள்ளது.
ஒவ்வொரு துணை மின்நிலையத்தில் இருந்தும் தனி பீடர் மூலம் மின் இணைப்பு மருத்துவக்கல்லுாரிக்கு வழங்கப்படுகிறது. ஆனால் சிவகங்கை மருத்துவக் கல்லுாரிக்கு மட்டும் தனி பீடர் மூலம் மின்சாரம் வழங்கப்படவில்லை. இதனால் நகரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டால் மருத்துவமனையிலும் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது.
கடந்த சில தினங்களாக அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. இதனால் நோயாளிகள் சிரமப்படுகின்றனர். மருத்துவமனையில் உள்ள ஜெனரேட்டர் மூலம் சி.டி.ஸ்கேன் இயந்திரத்தை இயக்க முடியவில்லை.
இந்த இயந்திரத்தை உயரழுத்த மின்சாரத்திலேயே இயங்க வைக்க முடியும் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதால் சி.டி ஸ்கேன் எடுப்பதில் மக்கள் மிகுந்த சிரமம் அடைகின்றனர்.
மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறுகையில், மருத்துவமனைக்கு தடையில்லா மின்சாரம் கிடைக்க தனி பீடர் அமைக்க மின்வாரியத்திடம் பலமுறை கோரிக்கை வைத்துவிட்டோம். அவர்கள் தான்நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.