ADDED : ஜூன் 17, 2025 11:25 PM
மானாமதுரை: மானாமதுரை நகர் பகுதியில் காலையில் ஏற்படும் மின்வெட்டால் அரசு ஊழியர்கள், மாணவர்கள் உரிய நேரத்தில் பள்ளி, கல்லுாரி, அலுவலகங்களுக்கு செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர்.
மானாமதுரை நகர் பகுதிக்கு சிப்காட் துணை மின் நிலையத்திலிருந்தும் மானாமதுரையை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளுக்கு ராஜகம்பீரம் துணை மின் நிலைய தொகுப்பிலிருந்தும் மின் வினியோகம் செய்யப்படுகிறது.
சில நாட்களாக மானாமதுரை நகர் பகுதிகளில் காலை 6:00 மணி முதல் 9:00 மணி வரை அடிக்கடி ஏற்படும் மின்வெட்டால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு செல்லும் ஊழியர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மின் மோட்டார்கள் மற்றும் சமையலுக்கு பயன்படுத்தப்படும் மின்சாதன பொருட்களை இயக்க முடியாததால் சிரமப்பட்டு வருகின்றனர்.
மின்வாரியத்தினர் காலை நேரத்தில் ஏற்படும் மின்வெட்டை சரி செய்ய வேண்டுமென பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: கடந்த சில நாட்களாக காற்றின் வேகம் அதிகமாக உள்ளதால் ஆங்காங்கே மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இதனை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறோம் என்றனர்.