/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திட்ட மதிப்பீடு அனுப்பியும் நிதி வரல..
/
திட்ட மதிப்பீடு அனுப்பியும் நிதி வரல..
ADDED : ஆக 08, 2024 10:38 PM

சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் நுாலகக் கட்டடம் கட்ட திட்ட மதிப்பீடு அனுப்பி நிதி வராத நிலையில் நுாலகத்தின் தரமும் உயரவில்லை என மாணவர்களும், வாசகர்களும் குமுறுகின்றனர்.
இப்பேரூராட்சியில் சீரணி அரங்கம் பின்புறம் கிளை நுாலகம் செயல்பட்டு வருகிறது. 60 ஆண்டுகளாக ஓட்டுக் கட்டடத்தில் இயங்கும் இந்நுாலகத்தின் சுவர்களில் வெடிப்பு ஏற்பட்டு, கூரையிலிருந்து மண் கொட்டுகிறது. வாசகர்கள் அச்சத்துடனையே நுாலகத்திற்குள் சென்று வருகின்றனர்.
இடப்பற்றாக்குறையால் விலைமதிப்பற்ற புத்தகங்கள் மூடையாக கட்டி போடப்பட்டுள்ளன. மழைக்காலங்களில் புத்தகங்கள் நனைவதும் காய வைத்து படிப்பதும் தொடர்கிறது.
சிங்கம்புணரி தனிதாலுகாவாக அறிவிக்கப்பட்ட போது இந்நூலகத்தை தாலுகா மையமாக தரம் உயர்த்தி புதிய கட்டடம் கட்ட வாசகர்கள் கோரிக்கை வைத்தனர். பேரூராட்சி நிர்வாகம் ஒப்புதல் அளித்து 2 கோடி ரூபாய் மதிப்பில் திட்ட மதிப்பீடும் அனுப்பப்பட்டது.
ஆனால் இன்று வரை நுாலகம் கட்ட அனுமதியோ, நிதியோ வரவில்லை. நுாலகத்தின் தரமும் உயரவில்லை. இப்பகுதி மாணவர்கள், இளைஞர்கள் பலர் டி.என்.பி.எஸ்.சி., உள்ளிட்ட பல்வேறு போட்டி தேர்வில் பங்கேற்க போதுமான புத்தகங்கள், வழிகாட்டிகள் கிடைக்காமல் பல்வேறு ஊர்களுக்கு சென்று வருகின்றனர். தாலுகா நுாலகம் கட்டப்பட்டால் அதில் போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்களுடன் கூடிய படிப்பகம் துவங்கப்பட்டு அனைவரும் பயன்பெற முடியும்.
எனவே உடனடியாக நுாலகத்திற்கான நிதி ஒதுக்கி கட்டுமானத்தை துவங்க வாசகர்கள் வலியுறுத்தி உள்ளனர்.