/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அனுமதி இல்லாமல் நடத்தப்படும் பந்தயங்கள்
/
அனுமதி இல்லாமல் நடத்தப்படும் பந்தயங்கள்
ADDED : ஆக 28, 2025 11:44 PM
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் அனுமதி இல்லாமல் பல்வேறு விழாக்களை யொட்டி போட்டிகள் நடத்தப்படுவதால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். கட்டுப்படுத்த வேண்டிய வருவாய்துறை, போலீசார் வேடிக்கை பார்க்கின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜன. முதல் மே வரை மஞ்சுவிரட்டு, மாடு, குதிரை வண்டிப் பந்தயங்கள் நடத்த மாவட்ட நிர்வாகத்தால் அனுமதி வழங்கப் படுகிறது. ஆனால் தற்போது அனைத்து மாதங்களிலும் சிலர் அனுமதி பெறாமல் மஞ்சுவிரட்டு, மாடு, குதிரை வண்டி பந்தயங்களை போக்குவரத்து அதிகமுள்ள ரோடுகளில் நடத்துகின்றனர்.
போலீசாரின் உரிய பாதுகாப்பு இல்லாமலும்,உரிய வழிகாட்டுதல் இல்லாமலும் நடத்தப்படும் மஞ்சுவிரட்டு, வண்டி பந்தயத்தால் பலருக்கு பாதிப்பு ஏற்படுகிறது. நேற்று முன்தினம் கூட சிவகங்கை அருகே நடந்த பந்தயத்தில் ரோட்டோரம் நடந்து சென்ற பெண் மீது மோதிய காட்சி வலைதளங்களில் வைரலானது.
அந்த பெண் சிறிய காயத்தோடு தப்பினார்.போலீசார் அனுமதியின்றி நிகழ்ச்சி நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.