UPDATED : ஆக 29, 2026 07:36 PM
ADDED : ஆக 29, 2026 07:32 PM
சிவகங்கை:சிவகங்கை அரசு மருத்துவமனையில் இறந்த இளைஞரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய தாமதித்ததால் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகரைச் சேர்ந்தவர் மனநலம் பாதிக்கப்பட்ட விஜயபாண்டி 33. தாய் தந்தை இல்லாததால் ராமநாதபுரத்தில் உள்ள அக்கா வீட்டில் வசித்து வந்தார். இவர் ஆக.25 அன்று வீட்டை விட்டு வெளியேறி மாயமானார். அவரது அக்கா ராமநாதபுரம் பஜார் போலீசில் புகார் அளித்தார். ஆக.27 அன்று இளையான்குடி பகுதியில் விஜயபாண்டி உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
விஜயபாண்டியை அடையாளம் கண்ட போலீசார் அவரது உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர். உறவினர்கள் விஜயபாண்டியை அடையாளம் காட்டிய பிறகு பிரேத பரிசோதனைக்கு கோரினர். நேற்று முன்தினம் மருத்துவமனையில் நேரம் கடந்துவிட்டதாகக் கூறி மறுநாள் பிரேத பரிசோதனை செய்யப்படும் என்று உறவினர்களிடம் கூறியுள்ளனர். நேற்றும் உறவினர்கள் மருத்துவமனையில் காத்திருந்தபோது போலீசார் அறிக்கை தவறாக கொடுத்து விட்டார்கள். நாளை (இன்று) பிரேத பரிசோதனை செய்த பிறகு உடலை வாங்கிகொள்ள டாக்டர்கள் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக பரிசோதனை செய்து விஜயபாண்டியின் உடலை ஒப்படைத்தனர்.
