/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கிராமங்களில் வீட்டு மனை முறைப்படுத்த கோரிக்கை
/
கிராமங்களில் வீட்டு மனை முறைப்படுத்த கோரிக்கை
ADDED : நவ 13, 2024 05:56 AM
திருப்புவனம் : திருப்புவனம் வட்டார கிராமங்களில் உள்ள வீட்டு மனைகளை முறைப்படுத்த வேண்டும் என கிராமமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
திருப்புவனம் தாலுகாவில் 45 ஊராட்சிகளைச் சேர்ந்த 173 கிராமங்கள் உள்ளன. கிராமங்களில் வரிசைப்படி வீடுகள், இடங்கள் அமைவது கிடையாது.கிராமமக்கள் பலரும் தங்கள் இஷ்டப்படி வீடுகளை கட்டியுள்ளனர். உள்ளாட்சி அமைப்புகளில் இதற்கு வீட்டு வரி ரசீதும் வழங்கி விடுகின்றனர். ஒவ்வொரு வீட்டிற்கும் கழிப்பறை வசதி, வாறுகால் வசதி உள்ளிட்ட எந்த வசதிகளும் ஏற்படுத்தி தர முடியாத அளவிற்கு வீடுகள் அமைந்துள்ளன.
தீவிபத்து உள்ளிட்ட காலங்களில் வாகனங்கள் கூட செல்ல முடிவதில்லை. கிராமங்களில் தங்கள் வீட்டுமனைகளுடன் பொது இடங்களையும் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு வழங்க முடிவதில்லை, அடுத்தடுத்த வீடுகளில் முன் விரோதம் காரணமாக தங்கள் வீடுகள் வழியாக குழாய்கள் பதிக்க கூட அனுமதிக்காமல் தகராறு செய்கின்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் கிராமப்புறங்களில் உள்ள வீட்டுமனைகளை ஆய்வு செய்து முறைப்படுத்த வேண்டும், உரிய அனுமதி பெறாத ஆக்கிரமிப்புகளை அகற்றி தெருக்களில் அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வரும் வகையில் பாதை வசதியும் ஏற்படுத்த வேண்டும், கிராமங்களில் இன்னமும் இடப்பிரச்னை காரணமாக கொலை சம்பவம் வரை நடந்த வண்ணம் உள்ளது. எனவே கிராமங்களில் வீட்டு மனைகளை வரைமுறைப்படுத்த வேண்டும்.

