ADDED : மார் 03, 2026 05:22 AM

திருப்புவனம்: திருப்புவனம் பைபாஸ் ரோட்டில் நடக்கும் சாலைப் பணிக்காக திடீரென முன்னறிவிப்பின்றி சாலை மூடப்பட்டதால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.
மதுரையில் இருந்து பரமக்குடி வரை நான்கு வழிச்சாலை அமைக்கப் பட்டு எட்டு ஆண்டு களான நிலையில் சாலை பல இடங்களில் சேத மடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. புதிதாக அமைக்கப்பட்ட சாலை என்பதால் தார்ச் சாலைகள் பல இடங்களில் பெயர்ந்து விட்டது.
இதனையடுத்து சாலை பராமரிப்பு பணி 15 நாட்களாக நடந்து வருகிறது. நேற்று லாடனேந்தல் பாலத்தில் இருந்து பாப்பான்குளம் பைபாஸ் ரோடு வரை தார்ச்சாலை அமைக்கும் பணிக்காக லாடனேந்தலில் இருந்து மானாமதுரை செல்லும் சாலையில் பாப்பான் குளம் விலக்கு முதல் 4 வழிச்சாலை பைபாஸ் ரோடு வரை வாகனங்கள் செல்லாதவாறு தடுப்பு அமைத்து விட்டனர்.
இதனால் மானாமதுரை பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் பைபாஸ் ரோடு வழியாக வர முடியாமல் பாப்பான்குளம் கிராமப்புற குறுகிய சாலை வழியாக லாடனேந்தல் வந்து திருப்புவனம் சென்றன.
திருப்புவனத்தில் இருந்து திருப்பாச்சேத்தி, மானாமதுரை செல்லும் வாகனங்களும் அதே பாதை வழியாக எதிர் திசையில் வந்தன. ஒரு கி.மீ., குறுகிய சாலை என்பதால் எதிர் எதிரே வரும் வாகனங்கள் விலக முடியாமல் நீண்ட துாரம் பின்னால் செல்ல வேண்டி இருந்தது. மேலும் குறுகிய வளைவுப் பகுதி என்பதால் பஸ், லாரி போன்ற வாகனங்கள் திரும்ப முடியவில்லை.
சாலை மூடப்பட்டதால் திருப்புவனம் நகருக்குள் தொலை துார பஸ்கள் வராமல் பைபாஸ் ரோட்டிலேயே சென்றன.

