ADDED : ஜூலை 10, 2025 10:56 PM
திருப்புவனம்; திருப்புவனத்தில் சாலை விரிவாக்கப்பணிக்காக தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நான்கு மின்கம்பங்களுக்கு பணம் செலுத்தியும், இடமாற்றம் செய்யப்படாததால் விரிவாக்க பணி கிடப்பில் போடப் பட்டுள்ளது.
திருப்புவனத்தில் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் பலரும் ஆக்கிரமித்து வியாபாரம் செய்கின்றனர். தினசரி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன் விபத்தும் நேரிட்டு வருகிறது.
வாகன ஓட்டிகள் தொடர்ந்து புகார் தெரிவித்ததையடுத்து ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டன.
மீண்டும் ஆக்கிரமிக்கா வண்ணம் நெடுஞ்சாலைத் துறை சார்பில் சாலை அகலப்படுத்தப்படும் பணி நடந்தது.
தினசரி ஆயிரக்கணக்கானோர் வந்து செல்வதால் இரவு ௯:௦௦ மணி தொடங்கி அதிகாலை ௫:௦௦ மணி வரை சாலை விரிவாக்க பணிகள் நடந்துள்ளன.
தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி உள்ள மின்கம்பங்கள் பலவும் ரோட்டிலேயே இருப்பதால் ஆக்கிரமிப்பாளர்களுக்கு வசதியாக இருந்தது. இதனையடுத்து தேசிய நெடுஞ்சாலையில் உள்ள எட்டு மின்கம்பங்களை இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டு மின்வாரியம் நிர்ணயித்த தொகை செலுத்தப்பட்டும் இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் சாலை விரிவாக்க பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
மாவட்ட மின்வாரிய அதிகாரி கூறியதாவது:
கடந்த வாரம் தான் விண்ணப்பித்தனர். மின்வாரிய அதிகாரிகள் முன்னிலையில் நெடுஞ்சாலைத் துறையே மின்கம்பங்களை மாற்றியமைத்து விடும் என்றார்.

