/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிங்கம்புணரியில் கொள்ளை சம்பவங்கள்: வழக்குப்பதிய மறுப்பதால் கொள்ளையர் ஜாலி
/
சிங்கம்புணரியில் கொள்ளை சம்பவங்கள்: வழக்குப்பதிய மறுப்பதால் கொள்ளையர் ஜாலி
சிங்கம்புணரியில் கொள்ளை சம்பவங்கள்: வழக்குப்பதிய மறுப்பதால் கொள்ளையர் ஜாலி
சிங்கம்புணரியில் கொள்ளை சம்பவங்கள்: வழக்குப்பதிய மறுப்பதால் கொள்ளையர் ஜாலி
ADDED : அக் 26, 2024 05:06 AM
இத்தாலுகாவில் சிங்கம்புணரி, உலகம்பட்டி, புழுதிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் சில ஆண்டுகளாக தொடர் கொள்ளை, வழிப்பறி சம்பவங்கள் நடந்து வருகிறது. ஓரிரு சம்பவங்கள் தவிர பலவற்றில் துப்பு துலக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
வழிப்பறி, கொள்ளை சம்பவங்கள் சிலவற்றில்புகார் கொடுத்தால் போலீசார் வழக்குப்பதிவுசெய்யாமல் அலைக்கழிப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் புலம்புகின்றனர். சிங்கம்புணரி பாரதி நகரில் ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவர் வீட்டில் சில மாதங்களுக்கு முன்பு நகை திருட்டு போன நிலையில் அது பற்றி புகார் அளித்தும் வழக்குப்பதியவில்லை.
கடந்த வாரம் ஒடுவன்பட்டியில் மூதாட்டியின் காதை அறுத்து நகை திருடு போன நிலையில் அதே நாளில் பக்கத்து ஊரான மேலப்பட்டியில் அரசு ஊழியர் ஒருவரின் வீட்டையும் உடைத்து நகை, பணத்தை திருடிச்சென்றுஉள்ளனர். ஆனால் காயமடைந்ததால் மூதாட்டி வீட்டில் நடந்த சம்பவத்திற்கு மட்டும் வழக்குப்பதிந்த போலீசார், அரசு ஊழியர் வீட்டில் நடந்த திருட்டு சம்பவம் தொடர்பாக புகார் அளித்தும் வழக்குப்பதிவு செய்யவில்லை.
இரு நாட்களுக்கு முன்பு எஸ்.புதுார் ஒன்றியம் இரணிபட்டியில் வீட்டை உடைத்து நகை, பணம், வெள்ளி பொருட்கள் திருடு போனது. அதே ஊரில் 2 மாதங்களுக்கு முன் தங்கராஜ் என்பவரின் வீட்டை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் கிராமத்தினர் ஒன்றாக சென்று புகார் அளித்தும் வழக்குப்பதியவில்லை.
கொள்ளை, வழிப்பறியை குறைத்து காட்டுவதற்காக பல சம்பவங்களில் வழக்குப்பதியாமல் விடுவதாகவும், வேறு வழக்குகளில் குற்றவாளிகள் பிடிபட்டால் பாதியளவு நகையை வாங்கித்தருவதாக சமரசப்படுத்துவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் புலம்புகின்றனர்.
கொள்ளை சம்பவங்களில் வழக்குப்பதியாமல் விடுவதாலும், ஏதாவது ஒரு வழக்கில் பிடிபடுவோரிடம் மீட்கப்படும் நகைகளில் சிலவற்றை வாங்கித்தந்து பழைய வழக்குகளை முடிப்பதாலும், கொள்ளையர்களுக்கு சிங்கம்புணரி பகுதியை பொறுத்தவரை பயம் இல்லாமல் போய் தொடர் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே நிலுவையில் உள்ள திருட்டு வழக்குகளை முறையாக விசாரித்து குற்றவாளிகளை கைது செய்வதுடன், எந்தவொரு வழிப்பறி, கொள்ளை சம்பவமாக இருந்தாலும் உடனுக்குடன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். அப்போது தான் இப்பகுதியில் கொள்ளை சம்பவங்களை தடுக்க முடியும் என்கின்றனர் மக்கள்.