ADDED : அக் 18, 2024 05:26 AM

இளையான்குடி: இளையான்குடி அருகே விஜயன்குடி செல்லும் ரோடு கரடு முரடாக இருப்பதால் கிராம மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மானாமதுரையிலிருந்து இளையான்குடி செல்லும் மெயின் ரோட்டிலிருந்து விஜயன்குடி,மருதங்கநல்லூர் செல்லும் 4 கிலோமீட்டர் துாரமுள்ள ரோடு போடப்பட்டு 15 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டதால் தற்போது ரோடு எங்கு பார்த்தாலும் கரடு, முரடாகவும் கற்கள் ரோட்டில் சிதறி கிராம மக்கள் நடந்து கூட செல்ல முடியாத நிலையில் உள்ளது. அவசர காலங்களில் 108 ஆம்புலன்ஸ் மற்றும் ஆட்டோக்கள் கூட வர மறுப்பதால் உடல்நலம் சரியில்லாமல் இருப்பவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டு வருவதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
இப்பகுதியில் உள்ள மாணவர்கள் இளையான்குடி,மானாமதுரை, சிவகங்கை உள்ளிட்ட ஊர்களில் உள்ள பள்ளி,கல்லுாரிகளுக்கு உரிய நேரத்தில் செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த ரோட்டை சீரமைக்க வேண்டுமென்று விஜயன்குடி கிராம மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்த ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.