/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
எஸ்.புதூர் ஒன்றியஅரசு பள்ளியில் வகுப்பறைகட்ட நெருக்கடி தாமதமாவதால் அவதி
/
எஸ்.புதூர் ஒன்றியஅரசு பள்ளியில் வகுப்பறைகட்ட நெருக்கடி தாமதமாவதால் அவதி
எஸ்.புதூர் ஒன்றியஅரசு பள்ளியில் வகுப்பறைகட்ட நெருக்கடி தாமதமாவதால் அவதி
எஸ்.புதூர் ஒன்றியஅரசு பள்ளியில் வகுப்பறைகட்ட நெருக்கடி தாமதமாவதால் அவதி
ADDED : டிச 13, 2025 05:29 AM

இவ்வொன்றியத்தில் உள்ள அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் பலவற்றில் மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப வகுப்பறை இல்லாமல் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் இடநெருக்கடியில் மாணவர்களை அமர வைத்து ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர்.
குன்னத்துார் அரசு நடுநிலைப் பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் நிலையில் பத்தாண்டுகளுக்கு முன்பு வரை மூன்று கட்டடங்களில் வகுப்பறை நடந்து வந்தது. ஓட்டு கட்டடம் 5 ஆண்டுகளுக்கு முன்பு இடிக்கப்பட்டது. மற்றொரு கான்கிரீட் கட்டடம் பழுது காரணமாக பூட்டப்பட்டது. இரண்டு வகுப்பறை கொண்ட ஒரே கட்டடத்தில் 8 வகுப்புகளும் நடத்த வேண்டியுள்ளது.
கம்ப்யூட்டர் ஆய்வகமும் இக்கட்டடத்தில் தான் அமைக்கப்பட்டுள்ளது. இடப்பற்றாக்குறையால் ஊராட்சி சமுதாய கூடத்தில் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இதேபோல் கிழவயல் அரசு நடுநிலைப் பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்பறை பற்றாக்குறை காரணமாக அருகே உள்ள திருமண மண்டபத்தில் பாடம் நடத்தப்படுகிறது.
மேலவண்ணாரிருப்பு கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 240க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். 8ம் வகுப்பு வரை வகுப்பு நடைபெறும் நிலையில் இரண்டு கட்டடங்களில் 6 வகுப்பறை மட்டுமே உள்ளது. இங்கு செயல்பட்டு வந்த ஓட்டு கட்டடம் பழுது காரணமாக 2 ஆண்டுகளுக்கு முன்பு இடிக்கப்பட்டது. இதுவரை புதிய கட்டடம் கட்டப்படவில்லை. பெற்றோர்கள் பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை. இதனால் மாணவர்கள் இட நெருக்கடியில் அமர்ந்து படிக்கின்றனர்.
ஒரே வகுப்பறையில் வெவ்வேறு வகுப்புகளுக்கு பாடம் நடத்தும் போது ஆசிரியர்களுக்கும் சிரமம் ஏற்படுகிறது. மேலும் பல பள்ளிகளில் பழைய கட்டடங்களில் இடநெருக்கடியில் வகுப்பு நடக்கிறது. எனவே அனைத்து பள்ளிகளையும் ஆய்வு செய்து தேவையான பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்ட அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

