/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வைகை ஆற்றில் தொடர் நீர்வரத்தால் மானாமதுரையில் மணல் திட்டுகள்
/
வைகை ஆற்றில் தொடர் நீர்வரத்தால் மானாமதுரையில் மணல் திட்டுகள்
வைகை ஆற்றில் தொடர் நீர்வரத்தால் மானாமதுரையில் மணல் திட்டுகள்
வைகை ஆற்றில் தொடர் நீர்வரத்தால் மானாமதுரையில் மணல் திட்டுகள்
ADDED : ஜன 15, 2024 11:00 PM

மானாமதுரை : வைகை ஆற்றில் கடந்த 2 மாதங்களாக தொடர்ந்து நீர் வரத்து காரணமாக மானாமதுரை பகுதி வைகை ஆற்றில் மறைந்து போன மணல் திட்டுக்கள் மீண்டும் ஆங்காங்கே உருவாகியுள்ளதால் விவசாயிகள் ஆர்வலர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான எக்டேர் பரப்பளவு விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
இந்நிலையில் கடந்த 2 மாதங்களாக வைகை அணை முழுவதும் அடிக்கடி நிரம்பி வருவதால் அங்கிருந்து 6,000 கன அடிக்கும் மேற்பட்ட தண்ணீர் சிறிய மற்றும் பெரிய மதகுகள் வழியே வைகை ஆற்றில் திறந்து விடுவதினால் மானாமதுரை பகுதி வைகை ஆற்றில் கடந்த 2 மாதங்களாக தொடர்ந்து தண்ணீர் சென்று வருகிறது. இந்நிலையில் மானாமதுரை வைகை ஆற்றுப்பகுதிகளில் நான் நாணல் செடிகள் மற்றும் கருவேல மலர்கள் வளர்ந்துள்ள நிலையில் அதனை அகற்ற வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் மானாமதுரை ராஜகம்பீரம் அருகே உள்ள தடுப்பணை அருகே உள்ள பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக தொடர்ந்து ஆற்றில் தண்ணீர் செல்வதன் காரணமாக ஆங்காங்கே மணல் திட்டுக்கள் உருவாகி உள்ளன.
இப்பகுதிகளில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நாணல் செடிகளும், கருவேல மரங்களும் வளர்ந்து கட்டாந்தரையாக காட்சியளித்த நிலையில் தற்போது மணல் திட்டுக்கள் உருவாகி உள்ளதை பார்த்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது, கடந்த 10 ஆண்டுக்கு முன் மானாமதுரை வைகை ஆற்று பகுதியில் எங்கு பார்த்தாலும் மணல் பரப்பாக காட்சியளித்தது. ஆனால் காலப்போக்கில் மணல் திருட்டு மற்றும் வறட்சி காரணமாக மணல் இன்றி நாணல் செடிகளும், கருவேல மரங்களும் வளர்ந்து காணப்பட்டது.
தற்போது தொடர் நீர்வரத்து இருப்பதால் மணல் திட்டுகள் உருவாகியுள்ளது. இதனால், நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது, என்றனர்.