ADDED : மே 24, 2025 11:51 PM

திருப்புத்துார் : திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் மகா சனி பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.
குன்றக்குடி தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் நேற்று மாலை 4:30 மணிக்கு நந்திதேவருக்கு முன்பாக யாகசாலை பூஜைகளை பாஸ்கர் குருக்கள் உள்ளிட்ட சிவாச்சார்யார்கள் நடத்தினர்.
தொடர்ந்து மாலை 5:30 மணிக்கு புனித கலச நீரால் நந்திதேவருக்கும், உற்ஸவ சுவாமி,அம்பாளுக்கும் அபிஷேக, ஆராதனைகள் நடந்தன.
பின்னர் உற்ஸவ சுவாமி, அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி தீபாராதனை நடந்தது. கோயில் பிரகாரங்களில் உற்ஸவ சுவாமி, அம்பாள் புறப்பாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் வழிபாட்டில் பங்கேற்றனர்.
*சிங்கம்புணரி சிவன் கோயில்களில் வைகாசி சனி பிரதோஷ வழிபாடு நடந்தது.
சிவகங்கை தேவஸ்தானத்துக்கு உட்பட்ட சிவபுரிபட்டி தர்மசம்வர்த்தினி, சுயம்பிரகாச ஈஸ்வரர் கோயிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. நேற்று மாலை 4:30 மணிக்கு நந்தீஸ்வரருக்கு அபிஷேகம், சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.
பிரான்மலை திருக்கொடுங்குன்றநாதர் கோயில், சதுர்வேதமங்கலம் ருத்ர கோடீஸ்வரர் கோயில், முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயில், கரிசல்பட்டி கைலாசநாதர், உலகம்பட்டி உலகநாயகி சமேத உலகநாதர் கோயில்களிலும் பிரதோஷ வழிபாடு நடந்தது.
*மானாமதுரை ஆனந்தவல்லி-சோமநாதர் கோயிலில் நடைபெற்ற வைகாசி சனி பிரதோஷ விழாவை முன்னிட்டு மூலவர் சோமநாதர் சுவாமிக்கும், நந்தி பெருமானுக்கும் அபிஷேக, ஆராதனை நடந்தது.
வெள்ளி உற்ஸவர் சோமநாதர் சுவாமி மற்றும் ஆனந்தவல்லி அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோயில் உள்வளாகத்தை வலம் வந்தனர்.
*இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர், சாலைக்கிராமம் வரகுணேஸ்வரர் கோயிலிலும் பிரதோஷ விழா நடந்தது.
* தேவகோட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், நித்திய கல்யாணி கைலாசநாதர், திருக்கயிலேஸ்வரர், வெளிமுத்தி பழம்பதிநாதர், கண்டதேவி சொர்ண மூர்த்தீஸ்வரர், ஆலமரத்து முனீஸ்வரர் கோயிலில் பிரதோஷத்தை தொடர்ந்து சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தன.