/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
போதிய மகப்பேறு மருத்துவர்கள் இல்லாததால் சிகிச்சை அளிப்பதில் திணறல்
/
போதிய மகப்பேறு மருத்துவர்கள் இல்லாததால் சிகிச்சை அளிப்பதில் திணறல்
போதிய மகப்பேறு மருத்துவர்கள் இல்லாததால் சிகிச்சை அளிப்பதில் திணறல்
போதிய மகப்பேறு மருத்துவர்கள் இல்லாததால் சிகிச்சை அளிப்பதில் திணறல்
ADDED : அக் 25, 2024 05:14 AM
காரைக்குடி: காரைக்குடி சூரக்குடி சாலையில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவிற்கு புதிய கட்டடம் கட்டப்பட்டு மகப்பேறு சிகிச்சைக்காக மாதந்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் வந்து செல்கின்றனர். மாதந்தோறும் 300 முதல் 400 பிரசவம் நடக்கிறது. இம்மருத்துவமனைக்கு காரைக்குடி மட்டுமின்றி புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமானோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
பல ஆண்டுகளான போதிய மகப்பேறு மருத்துவர்கள் இல்லாததால் சிகிச்சை அளிப்பதில் பிரசவம் பார்ப்பதில் பல்வேறு சிக்கல் நிலவுகிறது. போதிய மகப்பேறு மருத்துவர்களை நியமிக்க மருத்துவ அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இதுவரை முழுமையாக பணியிடம் நிரப்பப்படவில்லை.
மகப்பேறு மருத்துவர் மட்டுமின்றி பல்வேறு பிரிவுகளிலும் போதிய டாக்டர்கள் இல்லை. இதனால் வெளிநோயாளிகள், பிரசவத்திற்கு வருவோர் என பல்வேறு தரப்பினரும் மருத்துவமனையின் மீது உள்ள நம்பிக்கையை இழந்து வருகின்றனர்.
இதனை மீண்டும் நிரூபணமாக்கும் வகையில், மருத்துவமனையில் இருந்த லேப்ராஸ்கோப்பி மிஷின் மாயமானது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
காரைக்குடி அரசு மருத்துவமனையில் காது, மூக்கு தொண்டை சிகிச்சைக்கான நிரந்தர மருத்துவர் மருத்துவமனையில் இல்லை. ஆனால், காது மூக்கு தொண்டை சிகிச்சைக்காக தலா ரூ.26 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு லேப்ராஸ்கோப்பி மிஷின் வைக்கப்பட்டது. மிஷின் வழங்கிய நிறுவனத்தின் சார்பில் ஆய்வுக்கு வந்தபோது மிஷின் காணாமல் போனது தெரிய வந்தது. இது பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானதை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட மாவட்ட மருத்துவ அதிகாரிகள் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டனர்.
மருத்துவ அதிகாரிகள் கூறுகையில்: காரைக்குடியில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்ட நிலையில் காரைக்குடி அரசு மருத்துவமனையிலும் ஆய்வு நடந்தது. இணை இயக்குனர் உட்பட அதிகாரிகள் காது மூக்கு தொண்டை சிகிச்சை பிரிவில் மிஷின் காணாமல் போனது குறித்து விசாரணை நடத்தியுள்ளனர். விரைவில் மிஷின் கண்டுபிடிக்கப்படும் என்று நம்பிக்கை உள்ளது என்றனர்.
காரைக்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் லேப்ராஸ்கோப்பி மாயமான நிலையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.