/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
108 ஆம்புலன்சில் இறப்பவரை விபத்து பதிவேட்டில் பதியாமல் உடலை அனுப்பும் சிவகங்கை போலீசார்
/
108 ஆம்புலன்சில் இறப்பவரை விபத்து பதிவேட்டில் பதியாமல் உடலை அனுப்பும் சிவகங்கை போலீசார்
108 ஆம்புலன்சில் இறப்பவரை விபத்து பதிவேட்டில் பதியாமல் உடலை அனுப்பும் சிவகங்கை போலீசார்
108 ஆம்புலன்சில் இறப்பவரை விபத்து பதிவேட்டில் பதியாமல் உடலை அனுப்பும் சிவகங்கை போலீசார்
ADDED : பிப் 04, 2025 05:15 AM
சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வருபவர்கள் வழியில் இறந்தால் அவர்களை மருத்துவமனையில் உள்ள போலீசார் இறப்பு குறித்து விபத்து பதிவேட்டில் பதிவு செய்யாமல் மருத்துவமனை வாசலில் வைத்தே தனியார் ஆம்புலன்ஸ் மூலம் பேரம் பேசி உடலை உறவினர்களுடன் அனுப்புவதாக புகார் எழுந்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் அல்லுார் பனங்காடி பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை கதிர் அறுக்கும் இயந்திரத்தில் பணிபுரிந்த சேலத்தைச் சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க நபர் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டார். அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அவர் ஆம்புலன்சில் வரும் வழியிலேயே இறந்தார்.
மருத்துவக் கல்லுாரிக்கு வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இது குறித்த தகவலை அங்குள்ள போலீசார் மற்றும் டாக்டரிடம் கூறியுள்ளனர். பணியில் இருந்த போலீசார் 108ல் இருந்து வந்த நோயாளியின் விவரம் குறித்து விபத்து பதிவேடு பதியாமல் உறவினர்களிடம் பேசி தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதேபோல் கடந்த மாதமும் ஒருவரது உடலை இவ்வாறு அனுப்பி வைத்ததாக புகார் உள்ளது. 108 ஆம்புலன்சில் வந்து இறந்தவரின் உடல்களை முறையாக போலீசார் விசாரிக்காமல் விபத்து பதிவேடு பதியாமல் உடற்கூறு ஆய்வு செய்யாமல் இவ்வாறு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைப்பது பல குற்றச் செயல்களுக்கு ஊக்குவிப்பதை வழிவகுக்கும்.
எனவே மருத்துவ கல்லுாரி நிர்வாகம், மாவட்ட போலீசார் இவற்றை கருத்தில் கொண்டு இது குறித்து உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
மருத்துவ கண்காணிப்பாளர் கண்ணன் கூறுகையில், இது குறித்து புகார் எதுவும் இதுவரை வரவில்லை. புகார் எதுவும் வந்தால் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.