/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அரசு மருத்துவமனையில் பிரச்னைகள் ஏராளம்
/
அரசு மருத்துவமனையில் பிரச்னைகள் ஏராளம்
ADDED : மே 20, 2025 12:58 AM
சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ., ஸ்கேன் பழுது, டயாலிசிஸ் மையத்தில் ஏ.சி., பழுது நீடிப்பதால் பல்வேறு கட்சியினர் கலெக்டர் ஆஷா அஜித்திடம் புகார் அளித்தனர்.
சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைதீர் கூட்டத்தில்அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை நிர்வாகத்தின் மீது கட்சியினர் புகார் அளித்தனர்.
அதில், இங்கு அனைத்து பிரிவுக்கும் போதிய டாக்டர்கள் இல்லை. மருத்துவமனை வளாகத்தில் நோயாளிகளை அழைத்து செல்ல அமைக்கப்பட்ட 'லிப்ட்கள்' செயல்பாடின்றி கிடக்கிறது. பல மாதங்களாக எம்.ஆர்.ஐ., ஸ்கேன் பழுதடைந்தும், அதை சீரமைக்காமல் போட்டுள்ளனர்.
ஏழை, நடுத்தர குடும்பத்தை சேர்ந்த நோயாளிகளை எம்.ஆர்.ஐ., ஸ்கேன் எடுப்பதற்காக மதுரைக்கு பரிந்துரை செய்கின்றனர். அதே போன்று சிறுநீரக பிரச்னைக்காக டயாலிசிஸ் மையம் வரும் நோயாளிகள் அறையில், இயந்திரங்களுக்கு ஏற்ப ஏ.சி.,வசதியில்லை.
அரசு மருத்துவமனைக்கு கூடுதலாக மின் டிரான்ஸ்பார்மர் அமைத்து 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும். ஆனால், இதற்கு தேவையான டிரான்ஸ்பார்மரை மின்வாரியம் அமைக்கவில்லை. நரம்பியல், சிறுநீரகவியல், இதயவியல் பிரிவுகளில் டாக்டர்களின்றி நோயாளிகளை மதுரைக்கு செல்லுமாறு அலைக்கழிக்கின்றனர்.
இது போன்று அரசு மருத்துவமனையில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வெற்றி கழகத்தினர் கலெக்டர் ஆஷா அஜித்திடம் மனு அளித்தனர். மனுவை பெற்ற கலெக்டர்,டீன் சத்தியபாமாவின் நடவடிக்கைக்கு பரிந்துரை செய்தார்.