/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கோடவுனாக திருப்புவனம் போலீஸ் கவாத்து மைதானம்
/
கோடவுனாக திருப்புவனம் போலீஸ் கவாத்து மைதானம்
ADDED : ஜூலை 13, 2025 11:14 PM

திருப்புவனம்: திருப்புவனத்தில் போலீசாருக்கு சொந்தமான கவாத்து மைதானத்தை கிட்டங்கியாக மாற்றியதால் அவர்களுக்கு பயிற்சிகள் வழங்க இடமின்றி தவித்து வருகின்றனர்.
திருப்புவனம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர், இரண்டு எஸ்.ஐ.,க்கள் உள்ளிட்ட 50 பேர் பணிபுரிகின்றனர். மதுரை, விருதுநகர் மாவட்ட எல்லையில் திருப்புவனம் நகரம் அமைந்துள்ளது. காவல் நிலையத்திற்கு உட்பட்ட கிராமங்களும் அதிகம், ரோந்து சுற்றி வரும் பரப்பளவும் அதிகம், நான்கு வழிச்சாலையில் திருப்புவனம் நகரம் அமைந்திருப்தால் விபத்து உள்ளிட்ட சமயங்களில் போலீசார் அங்கும் செல்ல வேண்டியுள்ளது.
150 போலீசார் பணிபுரிய வேண்டிய இடத்தில் வெறும் 50 போலீசார் மட்டுமே பணிபுரிவதால் ஓய்வின்றி தொடர்ச்சியாக பணிபுரிய வேண்டியுள்ளது. வாராந்திர ஓய்வு உள்ளிட்டவைகளும் வழங்கப்படுவதில்லை. இரவு ரோந்து சென்று வந்த பின் காலையில் மீண்டும் பாதுகாப்பு பணி என அடுத்தடுத்து பணிகள் வழங்கப்படுவதால் சோர்வடைகின்றனர்.
இதுபோன்ற சமயங்களில் தங்களது கோபத்தை வழக்குகளில் சிக்குபவர்களிடம் காட்டி தணித்து கொள்கின்றனர். ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷன்களிலும் வாரம்தோறும் வெள்ளிக்கிழமை கவாத்து பயிற்சிகள் அளிக்கப்படும், இதில் போலீசாருக்கு கூட்டத்தை கலைத்தல், சமாதானப்பேச்சுவார்த்தை, வழக்கு விசாரணைக்கு வந்தவர்களிடம் நடந்து கொள்ளும் முறை உள்ளிட்டவைகள் வழங்கப்படும்,
ஆனால் பல ஆண்டுளாக திருப்புவனம் உள்ளிட்ட எந்த போலீஸ் ஸ்டேஷன்களிலும் பயிற்சிகள் வழங்கப்படுவதில்லை. சிவகங்கை மாவட்டத்திலேயே திருப்புவனம், தேவகோட்டை உள்ளிட்ட ஒருசில போலீஸ் ஸ்டேஷன்களுக்கு மட்டும்தான் சொந்தமாக கவாத்து மைதானம் உள்ளது. மற்ற போலீஸ் ஸ்டேஷன்களில் கவாத்து மைதானம் இல்லாததால் அருகில் உள்ள பள்ளி மைதானங்களை பயன்படுத்துகின்றனர்.
போலீசாரின் மனநிலை பக்குவமாக மாற உரிய பயிற்சிகள் வழங்க வேண்டும். ஆனால், கவாத்து மைதானத்தில் வழக்குகளில் சிக்கியுள்ள வாகனங்களை குவித்து வைக்கும் கோடவுனாக மாற்றியுள்ளனர். இதனால் பயிற்சிகள் வழங்கப்படுவதே இல்லை. திருப்புவனம் கவாத்து மைதானத்தை சுத்தம் செய்து உரிய பயிற்சிகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.