/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பிள்ளையார்பட்டியில் இன்று தேரோட்டம் சந்தனக் காப்பு அலங்காரத்தில் மூலவர்
/
பிள்ளையார்பட்டியில் இன்று தேரோட்டம் சந்தனக் காப்பு அலங்காரத்தில் மூலவர்
பிள்ளையார்பட்டியில் இன்று தேரோட்டம் சந்தனக் காப்பு அலங்காரத்தில் மூலவர்
பிள்ளையார்பட்டியில் இன்று தேரோட்டம் சந்தனக் காப்பு அலங்காரத்தில் மூலவர்
ADDED : ஆக 26, 2025 03:47 AM
திருப்புத்துார்: பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று மாலை தேரோட்டமும், மூலவர் சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தலும் நடைபெறும். நாளை காலை திருக்குளத்தில் சதுர்த்தி தீர்த்தவாரி உற்ஸவமும் நடைபெறும்.
நகரத்தார் கோயிலான இங்கு சதுர்த்திப் பெருவிழா பத்து நாட்கள் நடைபெறும். ஆக.18 ல் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தொடர்ந்து தினசரி இரவில் வாகனத்தில் கற்பகவிநாயகர் திருவீதி உலா நடை பெறுகிறது. இரண்டாம் நாள் துவங்கி நேற்று வரை காலையில் வெள்ளிக் கேடகத்தில் விநாயகர் வலம் வந்தார்.
ஒன்பதாம் நாளான இன்று காலை 9:00 மணிக்கு விநாயகர், சண்டிகேஸ்வரர் தேர்களில் எழுந்தருளுவர். இந்த ஆண்டு முதல் புதிதாக செய்யப்பட்டுள்ள தேரில் சண்டிகேஸ்வரர் எழுந்தருளுகிறார். தொடர்ந்து பக்தர்கள் தேரில் எழுந்தருளிய சுவாமிக்கு அர்ச்சனை செய்து வழிபாடு துவங்கும்.
மாலை 4:00 மணிக்கு மேல் தேரோட்டம் துவங்கும். தொடர்ந்து மூலவருக்கு சந்தனக்காப்பு அலங்காரம் நடைபெறும். பக்தர்கள் மாலை 4:30 மணி முதல் இரவு 10:00 மணி வரை மூலவரை சந்தன காப்பில் தரிசிக்கலாம்.
மறுநாள் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு காலை 10:00 மணி அளவில் கோயில் திருக்குளத்தில் தெற்கு படித்துறையில் அங்குசத்தேவருக்கு சிவாச்சார்யார்களால் தீர்த்தவாரி நடைபெறும்.
உச்சிக்கால பூஜையில் மதியம் 1:00 மணிக்கு மேல் மூலவருக்கு முக்கூருணி மோதகம் படையலிடப்படும். இரவில் பஞ்சமூர்த்திகள் திருவீதி உலாவுடன் விழா நிறை வடைகிறது.