ADDED : டிச 11, 2025 06:59 AM
திருப்புத்துார்: பிரதான கட்சிகள் கூட்டணியை இறுதி செய்யாத நிலையிலும், தேர்தலே அறிவிக்காத நிலையில் திருப்புத்துாரில் நா.த.கட்சி பெண் வேட்பாளர் பிரசாரத்தை துவக்கி தேர்தல் பணிகளை நடத்தி வருகிறார்.
தி.மு.க., எஸ்.ஐ.ஆர். பணியில் மும்முரமாகவும், அ.தி.மு.க., தேர்தல் நிலைப்பாட்டை உறுதிப்படுத்த பொதுக்குழு கூட்டியும், காங்., கூட்டணி குறித்து பேச குழு அமைத்தும், த.வெ.க.,மக்களை மீண்டும் சந்திக்கும் முயற்சியிலும் உள்ள நிலையில் மாறுதலாக நா.த.கட்சியினர் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பிரசாரத்தை துவக்கி விட்டனர்.
திருப்புத்துார் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் ரம்யா மோகன். எம்.எஸ்.சி.,பட்டதாரியான இவர் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளராக உள்ளார்.இவர் நவ. 27 ல் கட்சி நிர்வாகிகளுடன் பிரசாரத்தை துவக்கி விட்டார். கிராமங்களில் வீடு,வீடாக சென்று வேட்பாளர் அறிமுகம், அப்பகுதி பிரச்னைகளை பேசி ஆதரவு திரட்டும் திண்ணைப் பிரசாரத்தை துவக்கியுள்ளார்.

