ADDED : டிச 31, 2024 04:36 AM
திருப்புவனம்: திருப்புவனத்தில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் நடக்கும் குழாய் பதிப்பு பணி ஒரு வருடத்திற்கும் மேலாக நீடிப்பதால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகின்றனர்.
திருப்புவனத்தில் 16 கோடி ரூபாய் செலவில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் குழாய் பதிப்பு பணி 18 வார்டுகளிலும், தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக நடந்து வருகிறது. சிமென்ட் சாலை, தார்ச்சாலை, பேவர் பிளாக் சாலை உள்ளிட்டவற்றை தோண்டி குழாய் பதிக்கும் பணியில் ஒப்பந்தகாரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மீண்டும் பழைய முறைப்படி சாலையை அமைக்க வேண்டும் என்ற விதிகளை மீறி அப்படியே போட்டு விட்டு செல்கின்றனர். இதனால் நகரின் பல இடங்களிலும் சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் பலரும் கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே திருப்புவனம் புதூரில் தார்ச்சாலையை பெயர்த்து எடுத்து குழாய் பதித்தனர். அதே இடத்தில் பிரமனூர் திரும்பும் இடத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்தான் நெடுஞ்சாலைத்துறையினர் பாலம் கட்டி முடித்தனர். அதனையும் சேதப்படுத்தி குழாய் பதித்துள்ளனர். தேசிய நெடுஞ்சாலையில் குழாய் பதித்த பின் மீண்டும் பழைய முறைப்படி ரோட்டை சரி செய்யாமல் அப்படியே விட்டு விட்டதால் பள்ளமாக உள்ளது. அதில் இருசக்கர வாகன ஓட்டிகள் தினசரி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர்.
