/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
நீர்நிலைகளை மீட்க களமிறங்கிய அமைப்புக்கு பசுமை முதன்மையாளர் விருது வழங்கி கவுரவம்
/
நீர்நிலைகளை மீட்க களமிறங்கிய அமைப்புக்கு பசுமை முதன்மையாளர் விருது வழங்கி கவுரவம்
நீர்நிலைகளை மீட்க களமிறங்கிய அமைப்புக்கு பசுமை முதன்மையாளர் விருது வழங்கி கவுரவம்
நீர்நிலைகளை மீட்க களமிறங்கிய அமைப்புக்கு பசுமை முதன்மையாளர் விருது வழங்கி கவுரவம்
ADDED : ஆக 16, 2024 01:34 AM

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டத்தின் கடைமடை பகுதியான பேராவூரணியில், 2018ல் வீசிய 'கஜா' புயலின் போது மின் கம்பங்கள் சாய்ந்து, குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. அத்துடன் ஏரி, குளங்களை முறையாக துார் வராததால், நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பை சந்தித்தது.
அப்போது, நீரின் தேவையை உணர்ந்த பேராவூரணி பகுதி இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் ஒன்றிணைந்து, கடைமடை பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கம் என்ற அமைப்பை 2019ல் துவக்கினர்.
முதல்கட்டமாக பலரிடம் நிதி திரட்டி, 600 ஏக்கர் பரப்பளவு கொண்ட பேராவூரணி பெரியகுளம் ஏரியை துார்வாரி, குறுங்காடுகள் அமைத்தனர். இதனால், அந்தாண்டு பெய்த மழையால் ஏரியில் தண்ணீர் தேங்கி, நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது.
இதையடுத்து, அந்த அமைப்பினர், பொதுமக்கள் பங்களிப்புடன் துார்வாரும் பணியை தொடர்ந்தனர். இதுவரை, 211 ஏரி, குளங்களை துார்வாரி சீரமைத்துள்ளனர். இந்த அமைப்பில் 450 உறுப்பினர்களும், 75 வாழ்நாள் உறுப்பினர்களும் உள்ளனர்.
அவர்களின் சேவையை பாராட்டி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு துறையில் முன்மாதிரி பங்களிப்பான பசுமை முதன்மையாளர் விருது அறிவிக்கப்பட்டது.
நேற்று நடந்த சுதந்திர தின விழாவில், தஞ்சாவூர் கலெக்டர் பிரியங்கா பங்கஜம், பசுமை முதன்மையாளர் விருதுக்கான சான்றிதழ் மற்றும் 1 லட்சம் ரூபாய்க்கான காசசோலையை, அந்த அமைப்பின் தலைவர் கார்த்தி வேலுசாமி, செயலர் பிரபாகரன், நிறுவனர் நவீன் ஆனந்த், பொருளாளர் தங்ககண்ணன் ஆகியோரிடம் வழங்கினார்.
கார்த்தி வேலுசாமி கூறியதாவது:
எங்கள் பணியைப் பார்த்து, 'மில்கி மிஸ்ட்' நிறுவனர் இரண்டு ஹிட்டாச்சி வாங்கிக் கொடுத்தார். நீதிபதிகள், அரசு அமைப்பினர் என, பலரும் பாராட்டி வருகின்றனர். தற்போது பசுமை முதன்மையாளர் விருது கிடைத்திருப்பது மகிழச்சியளிக்கிறது.
தஞ்சாவூர், திருவாரூர், நாகை, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி மாவட்டங்களில், ஐந்தாண்டுகளில் 211 நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு மற்றும் நீர்வழி பாதைகளை கண்டறிந்து சீரமைத்துள்ளோம்.
மேலும், 4.50 லட்சம் பனை விதைகள் விதைத்து, 3.80 லட்சம் மரக்கன்றுகள் நட்டு, 38 குறுங்காடுகளை அமைத்துள்ளோம். அடுத்த தலைமுறைக்கு தண்ணீரை விட்டுச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் எங்கள் பணிகள் தொடரும்.
இவ்வாறு கூறினார்.

