ஓடும் பஸ்சில் இருந்து விழுந்த பெண் காயம்
கடமலைக்குண்டு: நாகராஜன் மனைவி தீபலட்சுமி 44, நேற்று முன் தினம் கடமலைக்குண்டிலிருந்து தனியார் பஸ்சில் ஆண்டிபட்டிக்கு பயணித்தார். கொம்புக்காரன் புலியூர் அருகே பஸ் சென்று கொண்டிருந்தபோது வளைவில் பஸ் திரும்பி உள்ளது. படிக்கட்டு அருகே நின்றிருந்த தீபலட்சுமி நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தார். தீபலட்சுமியின் தாயார் பிரேம லீலா புகாரில் தனியார் பஸ் டிரைவர் ரஞ்சித் குமார் மீது கடமலைக்குண்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
மரத்தில் இருந்து விழுந்த தொழிலாளி பலி
தேவாரம்: கம்பம் அருகே கருநாக்கன் முத்தன்பட்டியை சேர்ந்தவர் செல்வம் 30. தென்னை வெட்டும் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் தேவாரம் அருகே மூணாண்டிபட்டி பாலன் என்பவர் தோட்டத்தில் தென்னை மரத்தில் ஏறி இளநீர் வெட்டும் போது தவறி கீழே விழுந்துள்ளார். உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அதன்பின் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். தேவாரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
மனைவிக்கு மிரட்டல்: கணவர் மீது வழக்கு
போடி: டி.வி.கே.கே., நகரை சேர்ந்தவர் முனீஸ்வரி 34. இவரது கணவர் ஈஸ்வரமூர்த்தி 40. ஈஸ்வரமூர்த்திக்கு வேறொரு பெண்ணிடம் தொடர்பு இருப்பதாக அறிந்த முனீஸ்வரி கணவரிடம் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஈஸ்வரமூர்த்தி மனைவியை தகாத வார்த்தையால் பேசி, குக்கரால் அடித்து காயப்படுத்தி கொலை செய்ததாக மிரட்டல் விடுத்தார். பலத்த காயம் அடைந்த முனீஸ்வரி போடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். போடி டவுன் போலீசார் ஈஸ்வரமூர்த்தி மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.