/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
காய்கறி நாற்றுகளுக்கு நர்சரி துவக்க வலியுறுத்தல்
/
காய்கறி நாற்றுகளுக்கு நர்சரி துவக்க வலியுறுத்தல்
ADDED : ஜூலை 05, 2024 05:26 AM
கம்பம்: காய்கறி நாற்றுகள் வாங்க 50 கி.மீ. பயணம் செய்வதை தவிர்த்து கம்பம் பகுதியில் விவசாயிகள் வாங்கிக் கொள்ள வசதியாக தோட்டக்கலைத்துறை நர்சரி துவக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது,
தேனி தோட்டக்கலை மாவட்டமாகும். இங்கு காய்கறி பயிர்கள், பழப்பயிர்கள் அதிக பரப்பில் சாகுபடியாகிறது. தோட்டக்கலைத்துறை மூலம் விவசாயிகளுக்கு கத்தரி, தக்காளி, மிளகாய் நாற்றுக்கள் மானியமாக வழங்கப்படுகிறது. இந்த நாற்றுகளை வாங்குவதற்கு கூடலூர், கம்பம், சின்னமனுார், பகுதியில் உள்ள விவசாயிகள் நாற்றுக்கள் வாங்க 50 கி.மீ., தொலைவில் உள்ள பெரியகுளம் தோட்டக்கலை பண்ணைக்கு செல்ல வேண்டும். நாற்றுகளை எடுத்துவர வாகனங்களை கொண்டு செல்ல வேண்டும். வாடகை ரூ.3 ஆயிரம் வரை ஆகும். இதனால் விவசாயிகள் அவதிப்பட்டனர்.
விவசாயிகளின் பிரச்னைக்கு தீர்வு காண சின்னமனூர் ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் பசுமைக்குடிலில் நர்சரியை தோட்டக்கலைத்துறை கடந்தாண்டு துவக்கியது. தக்காளி, மிளகாய், கத்தரி நாற்றுகள் வளர்க்க பணிகள் துவங்கியது. ஆனால் அதற்குள் காய்கறி மொத்த வணிக வளாகம் கட்ட அறிவிப்பு வெளியானதால் நர்சரி செயல்பாடு நிறுத்தப்பட்டது. ஒன்று நிறுத்தப்பட்ட பணிகளை தோட்டக்கலைத்துறை மீண்டும் துவக்க வேண்டும். அல்லது கம்பம் அலுவலக வளாகத்தில் நர்சரி அமைக்க வேண்டும். நுகர்பொருள் வாணிப கிட்டங்கி வளாகத்தில் போதிய அளவு காலி இடம் உள்ளது. தோட்டக்கலைத்துறையினர் கம்பம் அல்லது சின்னமனூரில் நர்சரி துவக்க நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.