ADDED : பிப் 10, 2025 05:14 AM

மூணாறு: மூணாறில் 76ம் ஆண்டு பின்லே சுழற்கோப்பைக்கான கால்பந்தாட்டப் போட்டிகள் நேற்று முன்தினம் துவங்கின.
மூணாறில் தேயிலை தோட்டத் தொழிலாளர்களை பங்குதாரர்களாக உட்படுத்தி கே.டி.எச்.பி. கம்பெனி செயல்படுகிறது. இந்த கம்பெனி எஸ்டேட்டுகளுக்கு இடையே தொழிலாளர்கள் பங்கேற்கும் பின்லே சுழற்கோப்பைக்கான கால்பந்தாட்டப் போட்டிகளை ஆண்டு தோறும் நடத்தி வருகிறது.
இந்தாண்டுப் போட்டிகள் நேற்று முன்தினம் துவங்கின. அதனை மூணாறு டி.எஸ்.பி. அலெக்ஸ்பேபி துவக்கி வைத்தார். 14 அணிகள் மோதுகின்றன. துவக்க நாளில் கே.டி.எச்.பி. டிபார்ட்மெண்ட், பள்ளிவாசல் பேக்கட்டிங் சென்டர் ஆகிய அணிகள், டி.சி.பி.எல்., குண்டுமலை எஸ்டேட் ஆகிய அணிகள் மோதின. அதில் 2-:0 என்ற கோல் கணக்கில் கே.டி.எச்.பி. டிபார்ட்மெண்ட் அணியும், 2:0 என்ற கோல் கணக்கில் குண்டுமலை எஸ்டேட் அணியும் வெற்றி பெற்றன. இறுதி போட்டி பிப்.22ல் நடக்க உள்ளது.

