ADDED : மே 31, 2024 06:41 AM

போடி: போடி அருகே ராசிங்கபுரம் அழகர்சாமி கோயில் தெருவை சேர்ந்தவர் பட்டம்மாள் 40. இவர் தனது மகள்கள் பிரியதர்ஷினி 11, சுகப்பிரியா 8, ஆகியோருடன் நேற்று முன்தினம் தனது தாயார் வசிக்கும் நாகலாபுரத்திற்கு டூவீலரில் சென்று உள்ளார். (ஹெல்மெட் அணியவில்லை). தாயாரை பார்த்து விட்டு இரவு ராசிங்கபுரம் திரும்பி உள்ளார்.அப்போது போடி அருகே பெரிய பொட்டிபுரம் மேற்கு தெருவை சேர்ந்த அழகு தேவகுமார் 20. என்பவர் பொட்டிபுரத்திலிருந்து தேவாரம் மெயின் ரோட்டில் டூவீலரில் வேகமாக சென்றுள்ளார்.
(ஹெல்மெட் அணியவில்லை) முன்பக்கமாக சென்ற பஸ்சை முந்தி சென்ற போது, எதிரே பட்டம்மாள் ஓட்டி வந்த டூவீலர் மீது மோதி உள்ளார். இதில் பட்டம்மாள், பிரியதர்ஷினி, சுகப்பிரியா, அழகு தேவகுமார் கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்தனர். அழகு தேவகுமார் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். பலத்த காயம் அடைந்த பிரியதர்ஷினியை போடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியில் இறந்தார். பட்டம்மாள் புகாரில் போடி தாலுகா போலீசார் அழகு தேவகுமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.