/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ராஜ்கவுடர் கண்மாயில் முழுமை பெறாத சீரமைப்பு பணிகள் பாசன விவசாயிகள் தவிப்பு
/
ராஜ்கவுடர் கண்மாயில் முழுமை பெறாத சீரமைப்பு பணிகள் பாசன விவசாயிகள் தவிப்பு
ராஜ்கவுடர் கண்மாயில் முழுமை பெறாத சீரமைப்பு பணிகள் பாசன விவசாயிகள் தவிப்பு
ராஜ்கவுடர் கண்மாயில் முழுமை பெறாத சீரமைப்பு பணிகள் பாசன விவசாயிகள் தவிப்பு
ADDED : ஜூலை 18, 2024 04:54 AM

சின்னமனுார் : சின்னமனுாரில் இருந்து ஹைவேவிஸ் செல்லும் ரோட்டில் மலையடிவாரத்தில் உள்ளது ஓடைப்பட்டி பேரூராட்சி. திராட்சை, வாழை, காய்கறி பயிர்கள் அதிகம் சாகுபடியாகிறது. ஆற்றுப்பாசனம் கிடையாது. முழுக்க முழுக்க இறவை பாசனமாகும். இங்குள்ள கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் குறையாமல் இருக்க, ஓடைப்பட்டியில் பொன் ராஜ்கவுடர் கண்மாய் உள்ளது. 27 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த கண்மாய்க்கு சண்முகா நதி அணையிலிருந்து தண்ணீர் கொண்டு வரும் திட்டம் அறிவிக்கப்பட்டு, இன்று வரை நிறைவேற்றப்பட வில்லை.
மழை நீர் தேங்கி நிற்கும் இந்த கண்மாய் 2020 2021ல் மூலதன நிதித் திட்டத்தின் கீழ் ரூ.4.5 கோடியில் பராமரிப்பு செய்வதற்கான பணிகள் துவங்கியது. பராமரிப்புப் பணியின் -போது கண்மாயில் இருந்த நுாற்றுக்கணக்கான லாரி லோடு மண் விற்பனை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் அதுகுறித்த எந்த விசாரணையும் இல்லை.
தற்போது துார் வாரும் பணிகள் சரிவர செய்யப்பட்டுள்ளதா என்றால் இல்லை என பதில் தான் பெரும்பாலானவர்களிடம் இருந்து வருகிறது. தூர் வாரும் பணிகளின் போது அமைக்கப்பட்ட கரை, சமீபத்தில் பெய்த மழையில் பல இடங்களில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கண்மாய் முழு அளவில் தண்ணீர் நிரம்பும் பட்சத்தில், கரை உடையும் அபாயத்தில் உள்ளது. அத்துடன் பக்கவாட்டில் பதிக்கப்பட்டுள்ள சிமென்ட் சிலாப்புகளை கிழக்கு பக்கத்தில் உள்ள கரை, வடக்கு பக்க வெளிப்புற கரையில் பதிக்கவில்லை. தெற்குப் பக்கம் வேலை செய்யவில்லை. தனியார் தோட்டம் என்றால், மார்க் செய்து தடுப்புச் சுவர், கரை அமைத்திருக்க வேண்டும். அதை விட கண்மாய் நிரம்பும் போது, தண்ணீர் வெளியேறி செல்ல முடியாத அளவிற்கு நிலைமை உள்ளது. அதற்கான மடைகள் சேதமடைந்து உள்ளன. மொத்தத்தில் கண்மாயில் மண்ணை அள்ளி உள்ளார்கள். இரண்டு பகுதிகளில் சிமிண்ட் சிலாப் பதித்துள்ளார்கள். மதிப்பீட்டு தொகைக்கு இந்த வேலை எந்த அளவு சரியானது என்பதை சம்பந்தப்பட்டப் பொறியாளர்கள் தான் விளக்க வேண்டும்.
சேதமடைந்த கரைகள்
ஆதீஸ்வரன், சமூக ஆர்வலர், ஓடைப்பட்டி: கண்மாய் பராமரிப்புப் பணி நடந்தது போல் தெரியவில்லை. ரூ.4.5 கோடிக்கு என்ன வேலை செய்தார்கள். கண்மாய் ஒரு பகுதியில் மட்டும் செம்மண்ணை அள்ளி உள்ளனர். ஆக்கிரமிப்புகள் அகற்றவில்லை. கண்மாய்க்கு சண்முகா நதி அணை தண்ணீர் வரவில்லை. துார் வாரிய போது கரைகள் அமைத்தது தரமாக இல்லை. சமீபத்தில் பெய்த மழையில் கரைகள் சேதமடைந்தன. இந்த கண்மாய் நிரம்பும் போது, நீர் வெளியேற முடியாத நிலை உள்ளது. சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான தோட்டக் கிணறுகளுக்கு நிலத்தடி நீர் மட்டம் உயரவும், கால்நடைகளுக்கு குடிநீர் தேவை பூர்த்தி செய்யவும் பயன்படும் இந்த கண்மாய் முறையாக பராமரிப்பு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கண்துடைப்புப் பணி
மணிகண்டன், ஓடைப் பட்டி : கண்மாய் முழுமையாக துார்வார வில்லை. ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வில்லை. கண்மாயின் மொத்தப் பரப்பளவில் 3 ல் 2 பங்கு மட்டும் தூர் வாரி உள்ளனர். கரைகள் சரிவர அமைக்கவில்லை. கிழக்குப் பக்கம் சிமென்ட் சிலாப் பதிக்கவில்லை. முதலில் சர்வே செய்து, நான்கு மால் காண்பித்து பணிகள் செய்திருக்க வேண்டும்.
அதுவும் செய்யவில்லை. நுாற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் சாகுபடிக்கு பயன்படும். இந்த கண்மாய் பராமரிப்புப் பணிகள், ஒரு கண் துடைப்பு பணியாக நடந்து முடிந்திருக்கிறது., என்றார்.
ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை
தனுஷ்கோடி, பேரூராட்சித் தலைவர்: பராமரிப்புப் பணிகள் நல்ல படியாக நடந்துள்ளது. மழை அதிகமாக பெய்ததால் மண் கரையில் கசிவு ஏற்படுவது இயல்பானது தான். கிழக்குப் பக்கம் ரோடு என்பதால் சிமென்ட் சிலாப்புகள் பதிக்கவில்லை.
சண்முகா நதி அணையில் இருந்து தண்ணீர் கொண்டு வர வேண்டும் என்றால் 1.5 கி.மீ., வாய்க்கால் ஏற்படுத்த வேண்டும். பராமரிப்புப் பணிகளில் ஆக்கிரமிப்பு இன்னமும் அகற்றவில்லை.
சர்வேயர்களுக்கு கடிதம் கொடுத்துள்ளோம். லோக்சபா தேர்தல் வந்ததால் அந்த பணிகள் நின்று போனது. தற்போது சர்வேயர்களை அழைத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க உள்ளோம் என்றார்.