/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வைகை அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு
/
வைகை அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு
ADDED : செப் 01, 2024 01:45 AM
ஆண்டிபட்டி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் பாசனத்திற்காக திறக்கப்பட்ட நீரின் அளவு நேற்று வினாடிக்கு 900 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.
வைகை அணைக்கு முல்லைப் பெரியாறு, போடி கொட்டக்குடி ஆறு, வருஷநாடு வைகை ஆறுகள் மூலம் நீர்வரத்து கிடைக்கிறது. வைகை அணை நீர்மட்டம் ஜூலை 3ல் 51.71 அடியாக இருந்த போது மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் இரு போக பாசன நிலங்களின் முதல் போக பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. 45 நாட்களுக்கு முழுமையாகவும் 75 நாட்களுக்கு முறை வைத்தும் மொத்தம் 120 நாட்களுக்கு தண்ணீர் வெளியேற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் கால்வாய் வழியாக வினாடிக்கு 800 கன அடியாக இருந்த நீர் வெளியேற்றம் நேற்று காலை 11:30 மணிக்கு வினாடிக்கு 900 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. அணை நீர்மட்டம் 63.85 அடியாக இருந்தது (மொத்த உயரம் 71 அடி). அணைக்கான நீர் வரத்து வினாடிக்கு 194 கன அடி. மதுரை, தேனி, ஆண்டிபட்டி, சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 69 கன அடி நீர் வழக்கம்போல் வெளியேறுகிறது.