/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கம்பம் கால்நடை மருந்தகம்: தரம் உயர்த்த கோரிக்கை
/
கம்பம் கால்நடை மருந்தகம்: தரம் உயர்த்த கோரிக்கை
ADDED : டிச 08, 2024 05:48 AM
கம்பம், டிச.8-
தேனி மாவட்டத்தில் பசுக்கள், எருமைகள், கோழிகள் உள்ளிட்ட கால்நடைகளின் எண்ணிக்கை அதிகம் உள்ளது.
மாவட்டத்தில் பால் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிப்பதால் கேரள நிறுவனங்கள் தினமும் இங்கிருந்து 5 முதல் 10 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்கின்றனர்.
ஆவின் ஒரு லட்சம் லிட்டர் வரை கொள்முதல் செய்கிறது .
இங்கு கால்நடைகள் எண்ணிக்கை அதிகரித்த- போதும், கால்நடைகளின் உடல்நலன் காக்கும் மருத்துவமனைகள் போதிய அளவில் இல்லை. போடி, தேனி, பெரியகுளம் ஆகிய ஊர்களில் மட்டுமே மருத்துவமனைகள், கால்நடைமருத்துவ பல்கலை உள்ளன. தேவையான எண்ணிக்கையில் கால்நடை மருந்தகங்கள் இல்லை.
கிராமங்களில் கிளை நிலையங்கள் இருந்தும் போதிய பணியாளர்கள் இல்லாததால் பயன் இல்லை. உத்தமபாளையம் தாலுகாவில் மருத்துவமனை இல்லை. கம்பம் கால்நடை மருந்தகம், மருத்துவமனையாக மாற்ற தகுதி உள்ளது என கால்நடை பராமரிப்பு துறை பரிந்துரை செய்தது பல ஆண்டுகளுக்கு முன் சட்டசபையில் மானிய கோரிக்கையில் கம்பம் மருந்தகத்தை, மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் பல ஆண்டுகள் கடந்தும், மருத்துவமனையாக தரம் உயர்த்தவில்லை.
தரம் உயர்த்தப்பட்டால் உத்தமபாளையம் தாலுகாவில் உள்ள கால்நடைகளுக்கு இங்கு அறுவை சிகிச்சை, சினை ஊசி போடுதல் உள்ளிட்ட முக்கிய தேவைகள் நிறைவேறும். எனவே கம்பம் கால்நடை மருந்தகத்தை, மருத்துவமனையாக தரம் உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கால்நடை வளர்ப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர்.