/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இருளில் மூழ்கிய முந்தல் ரோடு வாகன ஓட்டிகள் அச்சம்
/
இருளில் மூழ்கிய முந்தல் ரோடு வாகன ஓட்டிகள் அச்சம்
ADDED : ஆக 04, 2024 06:16 AM
போடி : போடியில் இருந்து மூணாறு செல்லும் முந்தல் மெயின் ரோட்டில் மின் விளக்கு வசதி இல்லாமல் இருளில் மூழ்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்து வருகின்றனர்.
போடி - மூணாறு செல்லும் வழித்தடத்தில் அமைந்து உள்ளது முந்தல் மெயின் ரோடு. தேனியில் இருந்து 22 கி.மீ., சமவெளியில் சென்றால் போடி முந்தல் என்ற இடத்தை அடையலாம்.
இங்கிருந்து போடிமெட்டு, குரங்கணி, கேரளா பகுதியான மூணாறு டாப் ஸ்டேஷன் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லலாம். இப்பகுதியை காண தேனி மாவட்ட மக்கள் மட்டுமின்றி, வெளி மாநில சுற்றுலா பயணிகள் வருகை தந்து இயற்கை அழகை ரசித்து செல்கின்றனர். கேரளா பகுதியில் உள்ள தோட்டங்களில் வேலை செய்வதற்காக கூலி தொழிலாளர்களும் சென்று வருகின்றனர்.
தினந்தோறும் இப்பாதையில் 700 க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்நிலையில் முந்தல் செல்லும் மெயின் ரோட்டில் மின் கம்பங்கள் இருந்தும் விளக்கு வசதி இன்றி உள்ளது. இதனால் இப்பகுதி இருளில் மூழ்கி காணப்படுகின்றன. இரவில் வாகனங்கள் செல்லும் போது எதிரே வரும் வாகனங்களின் விளக்குகள் எதிரொலிப்பதால் வாகன ஓட்டிகள் சிரமம் ஏற்படுகிறது.
டூவீலர் உள்ளிட்ட வாகனங்கள் செல்லும் போது எதிரே வரும் வாகனங்கள் தெரியாத நிலையில் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் ஓட்டி வருவதோடு, அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்படுகின்றன.
பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படும் முன் போடி மூணாறு செல்லும் முந்தல் மெயின் ரோட்டில் விளக்கு வசதி, ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டிட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.