/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 120 அடியை கடந்தது -நீர்வரத்து, மின்உற்பத்தி அதிகரிப்பு
/
முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 120 அடியை கடந்தது -நீர்வரத்து, மின்உற்பத்தி அதிகரிப்பு
முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 120 அடியை கடந்தது -நீர்வரத்து, மின்உற்பத்தி அதிகரிப்பு
முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 120 அடியை கடந்தது -நீர்வரத்து, மின்உற்பத்தி அதிகரிப்பு
ADDED : ஜூன் 27, 2024 02:15 AM
கூடலுார்:முல்லைப் பெரியாறு அணை நீர்ப் பிடிப்பில் பெய்து வரும் கனமழையால் அணையின் நீர்மட்டம் 120 அடியைக் கடந்தது. அணைக்கு நீர்வரத்து, மின் உற்பத்தி மேலும் அதிகரித்துள்ளது.
கடந்த 10 நாட்களுக்கும் மேலாக முல்லைப் பெரியாறு அணை நீர்ப் பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடந்த மூன்று நாட்களாக மழை தீவிரமடைந்துள்ளது. நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி நீர்ப் பிடிப்பு பகுதியான தேக்கடியில் 53.4 மி.மீ., பெரியாறில் 74.8 மி.மீ., மழை பதிவானது. இதனால் 2 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து 3759 கன அடியாக அதிகரித்தது.
நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்து நேற்று மாலை 4:00 மணி நிலவரப்படி 120.55 அடியானது. (மொத்த உயரம் 152 அடி). நீர் இருப்பு 2610 மில்லியன் கன அடியாகும்.
நீர்மட்டம் உயர்ந்து வருவதால் தமிழகப் பகுதிக்கு குடிநீர் மற்றும் முதல் போக நெல் சாகுபடிக்காக திறக்கப்பட்டிருந்த வினாடிக்கு 878 கன அடி நீர், மேலும் அதிகரிக்கப்பட்டு 967 கன அடியாக திறக்கப்பட்டுள்ளது. இதனால் தேனி மாவட்டம் லோயர்கேம்ப் பெரியாறு நீர்மின் நிலையத்தில் மின் உற்பத்தியும் சற்று அதிகரிக்கப்பட்டு 87 மெகாவாட்டாக இருந்தது.
நேற்று பகல் முழுவதும் நீர்ப் பிடிப்பில் கன மழை பெய்ததால் அணையின் நீர்மட்டம் மேலும் உயரும் வாய்ப்புள்ளது. தமிழகப் பகுதிக்கு நீர் திறப்பு திடீரென அதிகரிக்கும் வாய்ப்புள்ளதால் லோயர்கேம்பில் இருந்து வீரபாண்டி வரையுள்ள முல்லைப் பெரியாற்றின் கரையோரப் பகுதிகளில் மக்கள் பாதுகாப்பாக இருக்க போலீஸ் மற்றும் நீர்வளத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.