/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வைகை அணையில் பாசனத்திற்கு நீர் திறப்பு
/
வைகை அணையில் பாசனத்திற்கு நீர் திறப்பு
ADDED : செப் 16, 2024 01:43 AM

ஆண்டிபட்டி: மதுரை, திண்டுக்கல்,சிவகங்கை மாவட்டங்களின் ஒருபோக பாசன நிலங்களுக்காக வைகை அணையில் இருந்து நேற்று தண்ணீர் திறந்து விடப்பட்டது.
பெரியாறு பாசன பகுதியில் உள்ள ஒரு போக பாசன பரப்பாகிய 85 ஆயிரத்து 563 ஏக்கர் நிலங்களுக்கும், திருமங்கலம் பிரதான கால்வாயின் கீழ் உள்ள ஒரு போக பாசனப் பரப்பாகிய 19 ஆயிரத்து 439 ஏக்கர் நிலங்களுக்கும் என மொத்தம் ஒரு லட்சத்து 5002 ஏக்கர் நிலங்களுக்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து நேற்று அமைச்சர் மூர்த்தி வைகை அணையின் மதகுகளை இயக்கி, வினாடிக்கு 1130 கன அடி வீதம் பெரிய மதகுகள் வழியாக தண்ணீர் திறந்து விட்டார்.
நிகழ்ச்சியில் தேனி எம்.பி., தங்கதமிழ்செல்வன், ஆண்டிபட்டி எம்.எல்.ஏ., மகாராஜன், கலெக்டர்கள் ஷஜீவனா (தேனி), பூங்கொடி (திண்டுக்கல்), சங்கீதா (மதுரை), பெரியாறு வைகை வடிநிலக்கோட்ட நீர்வளத்துறை செயற்பொறியாளர் அன்புச் செல்வம் பங்கேற்றனர்.
நீர் வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது: பெரியாறு பாசனப் பகுதியில் உள்ள நிலங்கள், திருமங்கலம் பிரதான கால்வாயில் கீழ் உள்ள ஒருபோக நிலங்களுக்கு வினாடிக்கு 1130 கன அடி வீதம் 45 நாட்களுக்கு முழுமையாகவும், 75 நாட்களுக்கு முறை வைத்தும் மொத்தம் 120 நாட்களுக்கு 8461 மில்லியன் கன அடி நீர் திறந்துவிட திட்டமிடப்பட்டுள்ளது.
நீர் திறப்பால் மதுரை மாவட்டத்தில் 98 ஆயிரத்து 764 ஏக்கரும், திண்டுக்கல் மாவட்டத்தில் 199 ஏக்கரும், சிவகங்கை மாவட்டத்தில் 6039 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறும்.
விவசாயிகள் குறுகிய கால பயிர்களை நடவு செய்தும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தியும் அதிக மகசூல் பெறுவதற்கு நீர்வளத் துறையுடன் ஒத்துழைக்க வேண்டும் என்றனர்.
நேற்று வைகை அணை நீர்மட்டம் 61.48 அடியாக இருந்தது(மொத்த உயரம் 71 அடி). அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 561 கன அடி. மதுரை, தேனி, ஆண்டிபட்டி -- சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 69 கன அடி நீர் வழக்கம்போல் வெளியேறுகிறது.