
போடி : போடி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு விபூதி அலங்காரத்தில் சிவனுக்கு சிறப்பு பூஜை, தீபாரதனைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவனின் தரிசனம் பெற்றனர்.
போடி அருகே பிச்சாங்கரை மலைப் பகுதியில் அமைந்துள்ள கைலாய கீழச் சொக்கநாதர் கோயில், மேலச் சொக்கநாதர் கோயில், திருமலாபுரம் முத்துமாரியம்மன் கோயில், வினோபாஜி காலனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், விசுவாசபுரம் பத்திரகாளியம்மன் கோயிலில் உள்ள சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தன.
பெரியகுளம் : கைலாசபட்டி கைலாசநாதர் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு கைலாசநாதர், பெரியநாயகி அம்மன், நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் பூஜை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழு தலைவர் ஜெயபிரதீப், செயலாளர் சிவக்குமார், பொருளாளர் விஜயராணி செய்திருந்தனர்.
பெரியகுளம் இந்திரன்புரி தெருவில் தையல் நாயகி உடனுறை சிவனேஸ்வரருக்கும், நந்தீஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன.
பெரியகுளம் அருகே ஈச்சமலை மகாலட்சுமி கோயிலில் அக்னி நட்சத்திரம் 2 ம் நாள், சித்திரை மாதம் பிரதோஷத்தை முன்னிட்டு ஒரு லட்சத்து எட்டு தீக்குச்சிகளை வைத்து அபிஷேகம் நடந்தது. 650 லிட்டர் கொள்ளளவு கொண்ட தாராபாத்திரத்தில் பச்சை கற்பூரம், ஏலக்காய், தண்ணீர் கொண்டு அக்னி நட்சத்திர வெயிலில் தாக்கத்தை குறைக்கும் வகையில் 60 நாட்களுக்கு தினமும் சிவன் மேல் சொட்டு சொட்டாக தண்ணீர் விழும். இதனால் சிவன் குளிர்ச்சியாக இருப்பார் என்பது ஐதீகம். நந்தி பகவானுக்கும், அதிகார நாகராஜருக்கும், சிவனுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேகம் நடந்தது.
பால், தயிர், சந்தனம், மஞ்சள், இளநீர், தேன் உட்பட 21 வகை நெய்வேத்திய திரவங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை டாக்டர் மகாஸ்ரீ ராஜன் செய்திருந்தார்.