ADDED : ஆக 31, 2024 06:35 AM

போடி: போடி அருகே கொட்டக்குடியில் ரூ.98 லட்சம் மதிப்பில் கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பெரியசாமி வழங்கினார்.
போடி ஒன்றியம், கொட்டகுடி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடந்தது. தங்கதமிழ்செல்வன் எம்.பி., பெரியகுளம் எம்.எல்.ஏ., சரவணகுமார் முன்னிலை வகித்தனர். கொட்டகுடி ஊராட்சித் தலைவர் ராஜேந்திரன் வரவேற்றார்.
விழாவில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியசாமி கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தில் தலா ரூ. 3.50 லட்சம் மதிப்பில் 28 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அணைக்கரைபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மேலப்பரவு மலைக் கிராமத்தில் பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.3 கோடியே 16 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஆற்று பாலத்தை பார்வையிட்டு பணியை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.
உடன் தி.மு.க., போடி நகர செயலாளர் புருஷோத்தமன், மேற்கு ஒன்றிய செயலாளர் லட்சுமணன், கிழக்கு ஒன்றியச் செயலாளர் அய்யப்பன் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.