ADDED : ஆக 18, 2025 03:08 AM

பெரியகுளம் : பெரியகுளத்தில் 63 நாயன்மார்களின் 3ம் ஆண்டு பெருவிழாவில் தமிழர்களின் பாரம்பரியமான செங்கோல் ஏந்தி சென்ற நடராஜர் வீதி உலா கோலாகலமாக நடந்தது. சிறப்பு மிக்க இவ்விழாவில் தமிழகத்தில் பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான சிவனடியார்கள், பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.
பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயிலில் மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் உட்பட 63 நாயன்மார்களுக்கு சன்னதிகள் உள்ளன. நாயன்மார்களுக்கு கோபிசெட்டிபாளையம் ஸ்ரீ மத்வாமதேவ சிவாக்கர தேசிக சுவாமிகள், சிலமலை சைவசமய சிவாலய திருப்பணியாளர் எஜமான் பாண்டிமுனீஸ்வரர், சிவனடியார்கள் இணைந்து 63 நாயன்மார்களுக்கு தீபாராதனை, சிறப்பு பூஜைகள் செய்தனர். தொடர்ந்து வடுகா நாயுடு மண்டபத்தில் ஆன்மிக சொற்பொழிவு, இசைச் சொற்பொழிவு நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் சிறுவர்கள், சிறுமிகள் 63 நாயன்மார்கள் வேடமிட்டு முன்னே செல்ல முக்கிய வீதிகளில் நடராஜர் சுவாமி வீதி உலா நடந்தது. எஜமான் பாண்டி முனீஸ்வரர் கையில் செங்கோல் ஏந்தி வந்தார். மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். மாயாபாண்டீஸ்வர கைலாய வாத்தியக்குழு சிவனடியார்கள் இசை முழக்கத்துடன் பெரியகுளம் நகரின் முக்கிய வீதிகளில் வீதி உலா நடந்தது. ஏற்பாடுகளை பெரியகுளம் ஸ்ரீ ராஜேந்திர சோழீஸ்வரர் சிவனடியார்கள் அறக்கட்டளை தலைவர் குணசேகரன், செயலாளர் ஈஸ்வரன், பொருளாளர் சுப்ரமணியன், தேனி மாவட்டம் உலக சிவனடியார்கள் திருக்கூட்டத்தினர் செய்திருந்தனர்.-