/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கேரளாவில் இருந்து கழிவுகளை கொட்ட வந்தவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
/
கேரளாவில் இருந்து கழிவுகளை கொட்ட வந்தவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
கேரளாவில் இருந்து கழிவுகளை கொட்ட வந்தவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
கேரளாவில் இருந்து கழிவுகளை கொட்ட வந்தவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
ADDED : நவ 02, 2025 10:51 PM
கம்பம்: கேரளாவில் இருந்து தேனி மாவட்டம் கம்பமெட்டு வனப்பகுதியில் ரெக்சின் கழிவுகளை கொட்ட வந்த காரை சோதனையிட்டு வனத்துறை அதிகாரிகள் உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து, எச்சரித்து அனுப்பினர்.
கேரள மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் இருந்து மருத்துவக் கழிவுகளை தமிழக பகுதிக்குள் கொண்டு வந்து சிலர் தொடர்ந்து கொட்டி வந்தனர்.
இதுதொடர்பாக உயர்நீதிமன்றம் தலையிட்டு உத்தரவுகள் பிறப்பித்த பிறகே மருத்துவக் கழிவுகள் கொட்டுவது குறைந்தது.
இருப்பினும் இடுக்கி மாவட்டத்தில் உள்ள கட்டப்பனை, தொடுபுழா, மூவாற்றுப்புழா, வண்டிப்பெரியாறு, நெடுங்கண்டம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினந்தோறும் குப்பைகளை வாகனங்களில் கொண்டு வந்து கம்பமெட்டு வனப்பகுதிகள், கம்பமெட்டு அடிவார காடுகளில் கொட்டிச் செல்கின்றனர்.
சமீபத்தில் விவசாயிகள் அளித்த புகாரில் மாசு கட்டுப்பாடு அதிகாரிகள் இப்பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். அதன் பிறகும் குப்பை கொட்டுவது தொடருகிறது.
நேற்று முன்தினம் கட்டப்பனை 'ஸ்ரீராம் ரெக்சின் ஒர்க்ஸ்' என்ற கடையில் சேகரமான ரெக்சின் கழிவுகளை காரின் டிக்கியில் வைத்து உரிமையாளர் சோலைராஜா 38, கம்பமெட்டு வனப்பகுதிக்கு கொண்டு வந்தார். சோதனை சாவடியில் வனத்துறையினர் சோதனையிட்ட போது கழிவுகளை கொண்டு வந்தது தெரிந்தது. சோலைராஜாவிற்கு வனத்துறையினர் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
கழிவுகளை கொண்டு வருவோருக்கு அபராதம் விதிப்பதை தவிர்த்து அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட வேண்டும். அப்போது தான் கழிவுகள் கொட்டுவதை முழுமையாக தடுக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

