ADDED : அக் 14, 2024 07:58 AM
ஆண்டிபட்டி : 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற ராஜகம்பளத்தார் சமூகத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு, பாராட்டு விழா ஆண்டிபட்டி தனியார் விடுதி கூட்ட அரங்கில் நடந்தது.
மாவட்ட ராஜா கம்பளத்தார், ஆண்டிபட்டி மாலைக்கோயில் சங்கம் சார்பில் நடந்த விழாவில் சங்க நிரந்தர தலைவர் நவநீதகிருஷ்ணன் தலைமை வகித்தார். துணைத் தலைவர்கள் கோபால், முத்துரெங்கவிஜயன், துணைச் செயலாளர்கள் பால்பாண்டியன், சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் நாகராஜன் வரவேற்றார். தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழக பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன், முன்னாள் பொதுச் செயலாளர் தங்கராஜ், மத்திய அரசின் பொதுப் பணித்துறை இயக்குனர் (ஓய்வு) ராமராஜ் உட்பட பலர் வாழ்த்தி பேசினர்.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 உட்பட பல்வேறு உயர் கல்வி பயிலும் மாணவர்கள் 86 பேருக்கு மொத்தம் ஒரு லட்சத்து 74 ஆயிரம் ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்பட்டது. மாலைக்கோயில் சங்கப் பொருளாளர் காமயசாமி நன்றி கூறினார்.