ADDED : நவ 17, 2025 01:42 AM
மூணாறு: ஓட்டு சேகரிப்புக்கு இடையே தெரு நாய் கடித்து காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் காயம் அடைந்தார்.
கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் டிச.,9, 11ல் 2 கட்டங்களாக நடக்கிறது. இடுக்கி மாவட்டத்தில் முதல் கட்டமாக டிச.,9ல் தேர்தல் நடக்கிறது. அதனை எதிர் கொள்ளும் வகையில் அரசியல் கட்சியினர் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பல பகுதிகளில் வேட்பாளர்கள் தேர்வு நடந்து வரும் நிலையில், தேர்வான வேட்பாளர்கள் ஓட்டு சேகரிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அதன்படி மூணாறு அருகில் உள்ள பைசன்வாலி ஊராட்சியில் 2ம் வார்டில் காங்கிரஸ் கூட்டணி சார்பில் போட்டியிடும் ஜான்சி, இருபது ஏக்கர் பகுதியில் நேற்று முன்தினம் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராத வகையில் ஜான்சியை தெரு நாய் கடித்தது. இடது காலில் பலத்த காயம் அடைந்தவரை உடனிருந்தவர்கள் அடிமாலி தாலுகா மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்ற பிறகு ஜான்சி, மீண்டும் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.

