/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கப்பலில் வேலை என கூறி மோசடி செய்தோர் மீது வழக்கு
/
கப்பலில் வேலை என கூறி மோசடி செய்தோர் மீது வழக்கு
ADDED : ஏப் 22, 2025 07:27 AM
உத்தமபாளையம் : கப்பலில் வேலை வாங்கி தருவதாக கூறி, 3 லட்சம் ரூபாய் பணம் வாங்கி மோசடி செய்ததாக இருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துஉள்ளனர்.
தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே உள்ள பல்லவராயன்பட்டியைச் சேர்ந்தவர் ஆனந்த், 21. தேனி பொறியியல் கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு படிக்கிறார். இவருக்கு, கன்னியாகுமரியைச் சேர்ந்த தில்லைராஜா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. கப்பலில் வேலை வாங்கி தருவதாக தில்லைராஜா கூறியதை நம்பிய ஆனந்த், பிப்ரவரி 15, 17ம் தேதிகளில், தில்லைராஜாவின் வங்கி கணக்குக்கு 3 லட்சம் ரூபாய் அனுப்பினார். ஆனந்தை, ஏஜன்ட் ராஜசேகர் என்பவரை சென்னையில் சந்திக்க தில்லைராஜா அனுப்பினார்.
ராஜசேகர், அவரை மும்பையில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு அனுப்பினார். அவர்கள், ஆனந்தை கோவாவிற்கு அனுப்பினர். அதன்பின், கப்பலில் வேலை நடப்பதாகவும் அதுவரை காத்திருக்குமாறும் கூறினர். பத்து நாட்களாகியும் வேலை வழங்காததால் மீண்டும் மும்பைக்கு வந்தார் ஆனந்த். ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஆனந்த், தேனி எஸ்.பி.,யிடம் புகார் செய்தார். அதன்படி, தில்லைராஜா, ராஜசேகர் மீது கோம்பை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.