ADDED : அக் 19, 2024 04:45 AM

கம்பம் : கம்பத்திலிருந்து சுருளி அருவிக்கு செல்லும் ரோட்டில் முல்லைப் பெரியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலம் சேதமடைந்து வருகிறது.
கம்பத்திலிருந்து அருவிக்கு செல்லும் ரோட்டில் சுருளிப்பட்டி அருகே முல்லைப் பெரியாற்றின் குறுக்கே பெரிய பாலம் கட்டப்பட்டுள்ளது. பழமையான இந்த பாலத்தின் வழியே சுருளிப்பட்டி, சுருளி அருவி, கருநாக்கமுத்தன்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி, சுருளியாறு மின்நிலையம், நாராயணத்தேவன்பட்டி உள்ளிட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து நடைபெறுகிறது. குறிப்பாக சுருளி அருவிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளும் இந்த பாலத்தின் வழியே செல்கின்றனர்.கடந்த ஓராண்டிற்கும் முன்பிருந்தே பாலத்தின் கைப்பிடி சுவர்கள் சேதமடைந்து வருகிறது. அடிப்பாகத்திலும் சேதம் உள்ளதாக கூறுகின்றனர். விபத்து ஏற்படுவதற்கு முன், நெடுஞ்சாலைத் துறை இந்த பாலத்தை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.