ADDED : ஜன 12, 2024 06:32 AM
கம்பம் : மேகமலையில் கனமழை பெய்து வருவதால், இங்குள்ள ஹைவேவிஸ், மணலாறு, வெண்ணியாறு இரவங்கலாறு அணைகள் நிரம்பி வருகிறது.
கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மேகமலை பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
சாரல் மழையாக துவங்கி கடந்த இரண்டு நாட்களாக இரவும், பகலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் இங்குள்ள ஹைவேவிஸ், மணலாறு, வெண்ணியாறு, இரவங்கலாறு அணைகள் நிரம்பி வருகிறது.
இந்த அணைகளில் சேகரமாகும் தண்ணீர் இரவங்கலாறு அணையில் தேக்கி, அங்கிருந்து வண்ணாத்திபாறை வனப்பகுதியில் உள்ள சுருளியாறு நீர் மின்நிலையத்தில் மின் உற்பத்தி செய்வார்கள்.
கடந்த 2021 ல் இருந்து சுருளியாறு மின்நிலையம் பழுதேற்பட்டு, மின் உற்பத்தி நிறுத்தப்பட்டிருப்பதால், அணைகளில் சேகரமாகும் தண்ணீர் வாய்க்கால் வழியாக சுருளியாற்றில் திருப்பி விடப்படுகிறது.
தற்போதும் அணைகள் நிரம்பி வருவதால், பல்வேறு பாதைகள் மூலம் தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர்.
பத்துக்கூடு பகுதியில் கூடுதல் மழை பெய்வதால் சண்முகா நதிஅணை இரண்டாவது முறையாக நிரம்பி மறுகால் பாய்கிறது. விநாடிக்கு 112 கனகடி வறட்டாறு வழியாகவெளியேற்றப்படுகிறது.