ADDED : ஜன 05, 2024 10:16 PM

கூடலுார், : ஆந்திராவிலிருந்து சபரிமலைக்கு ஆயிரம் கி.மீட்டருக்கு மேல் ஐயப்பன் ரதத்துடன் 18 பக்தர்கள் நடந்து கூடலுார் வந்தனர்.
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் பகுடிபாடு கிராமத்தைச் சேர்ந்த 18 ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து குருசாமி ஈரையா தலைமையில் நவ. 18ல் அங்கிருந்து நடைபயணமாக கிளம்பினர். ஐயப்பன் ரதத்தை இழுத்துக் கொண்டு ஆயிரம் கி.மீட்டருக்கு மேல் நடைபயணமாக நேற்று கூடலுார் வந்தடைந்தனர்.
ஈரையா கூறும்போது:
கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஐயப்பன் ரதத்துடன் நடை பயணமாக சபரிமலைக்கு வருகிறோம். இந்த ஆண்டு 18 பேருடன் மகர விளக்கு விழாவில் ஐயப்பனை தரிசனம் செய்வதற்காக 47 நாட்களாக பயணம் மேற்கொண்டுள்ளோம். வழிநெடுகிலும் ஆங்காங்கே பக்தர்கள் ஐயப்பன் சிலைக்கு மாலை அணிவித்து வணங்கினர்.
இரவில் மட்டும் கோயில்களில் தங்குவோம். வாகனங்களில் வெளியேறும் புகையால் மாசு ஏற்படுவதை தடுப்பதற்கான விழிப்புணர்வாகவும் இப் பயணம் உள்ளது.
மேலும் உடல் நலத்திற்கும் பயனுள்ளதாகும். சபரிமலையில் தரிசனம் முடிந்து ஜன. 16ல் வாகனம் மூலம் ஆந்திரா செல்வோம் என்றார்.