ADDED : டிச 01, 2024 07:32 AM

மூணாறு : மூணாறு அருகே பள்ளி வேனை வழிமறித்து சம்பவத்திற்கு பிறகு படையப்பா யானையை வனத்துறை விரைவு நடவடிக்கை குழு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
மூணாறு பகுதியில் வலம் வரும் காட்டு யானைகளில் மிகவும் பிரபலமான படையப்பா ஆண் காட்டு யானை சமீபகாலமாக வாகனங்களுக்கு எதிராக தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றது. சாதுவாக சுற்றித்திரிந்த படையப்பாவை வாகனங்களை கொண்டு சீண்டியதால் தாக்குதல் சுபாவத்திற்கு மாறியதாக வனத்துறையினர்கருத்து.
இந்நிலையில் மூணாறு அருகே நெற்றிமேடு, குட்டியாறுவாலி ரோட்டில் நவ.27ல் பள்ளி வேனை படையப்பா வழிமறித்த சம்பவம் பெரும்பதட்டத்தை ஏற்படுத்தியது. ரோட்டோரம் யானை நிற்பதை டிரைவர் பார்த்தும் அதனை கடக்க முயன்றதால் ஆக்ரோஷமாக வேனை எதிர்கொண்டது. உடனே சுதாரித்து கொண்ட டிரைவர் வேனை பின்னோக்கி வெகு தூரம் நகர்த்தி சென்றதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
கண்காணிப்பு:இச்சம்பவத்தையடுத்து படையப்பாவை கண்காணிக்குமாறு தேவிகுளம் வனத்துறை அதிகாரி வெஜி உத்தரவிட்டார். அதன்படி வனத்துறை சார்பிலான 10 பேர் கொண்ட விரைவு நடவடிக்கை குழு 24 மணி நேரமும் படையப்பாவை கண்காணித்து வருகின்றனர். மூணாறு அருகே கிராம் ஸ்லாண்ட் எஸ்டேட் தேயிலை பாக்டரி பகுதியில் உள்ள காட்டில் நேற்று பகலில் படையப்பா முகாமிட்டது.கடந்த ஜனவரி, பிப்ரவரி ஆகிய மாதங்களில் மதம் பிடித்த அறிகுறியுடன் சுற்றித்திரிந்த படையப்பா ஏராளமான வாகனங்களை சேதப்படுத்தியது.அது போன்ற சூழல் தற்போது இல்லை என வனத்துறையினர் தெரிவித்தனர்.

