ADDED : ஆக 31, 2025 04:13 AM

கடமலைக்குண்டு: வருஷநாடு அருகே தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயி கரடி தாக்கியதில் படுகாயம் அடைந்தார்.
வருஷநாடு அருகே தர்மராஜபுரத்தை சேர்ந்தவர் முருகன் 53, இவருக்கு சொந்தமான தோட்டம் தர்மராஜபுரம் பஞ்சம் தாங்கி மலையடிவாரத்தில் உள்ளது. தினமும் தோட்டத்திற்கு சென்று வேலை பார்த்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். நேற்று காலை வழக்கம் போல தனது தோட்டத்திற்கு முருகன் சென்றார். அப்போது புதர் மறைவில் இருந்த கரடி ஒன்று திடீரென முருகன் மீது பாய்ந்து தாக்கியது. அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று கரடியை விரட்டி முருகனை மீட்டனர். கரடி தாக்கியதில் முருகனின் தலை மற்றும் உடல் பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தகவல் அறிந்த கண்டமனூர் வனச்சரக அதிகாரிகள் கடமலைக்குண்டு போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளனர். வருஷநாடு சுற்று வட்டார பகுதிகளில் சில மாதங்களாக வன விலங்குகளால் பொதுமக்கள் பாதிக்கப்படும் சம்பவங்கள் தொடர்வதால் மலை கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

