/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
காபி விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி
/
காபி விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : பிப் 04, 2025 08:19 PM

போடி:தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் காபி விளைச்சலும் விலையும் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தேனி மாவட்டத்தில் போடி அருகே குரங்கணி, முட்டம், முதுவாக்குடி, பிச்சாங்கரை, போடிமெட்டு, வடக்கு மலை, அகமலை உள்ளிட்ட பகுதிகளில் 30 ஆயிரம் ஏக்கரில் காபி பயிரிடப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் காபி பழம் எடுக்கும் கூலிக்கு கூட கட்டுபடியாகாத விலை கிடைத்ததால் பலரும் காபி செடிகளை அழித்து ஏலக்காய் பயிரிட ஆர்வம் காட்டினர். இதனால் காபி உற்பத்தி 20 ஆயிரம் ஏக்கராக குறைந்தது.
திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி, பெருமாள் மலையில் காபி சாகுபடி உள்ளது. அக்., நவ., டிச., ஜன., மாதங்கள் காபி சீசன் மாதங்களாகும். இங்கு உற்பத்தியாகும் காபி பெல்ஜியம், ரஷ்யாவுக்கு ஏற்றுமதி ஆகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டை காட்டிலும் இந்தாண்டு காபி விளைச்சல் அதிகரித்து உள்ளது.
தற்போது பிரேசில், வியட்நாமில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தால் காபி உற்பத்தியில் பாதிப்பு உள்ளது. தமிழகத்தில் விளையும் காபிக்கு மவுசு ஏற்பட்டு விலை அதிகரித்து வருகிறது.
கடந்த ஆண்டு கிலோ 150 ரூபாய்க்கு விற்ற உருளை ரகம் தற்போது 220 ரூபாய்க்கும், கிலோ 295 ரூபாய்க்கு விற்ற அரபி தளர் ரகம் தற்போது 420 ரூபாய்க்கும், கிலோ 300 ரூபாய்க்கு விற்ற அரிசி ரகம் 600 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.
விவசாயிகள் கூறியதாவது : கடந்த ஆண்டு வரை காபிக்கு போதிய விலை இல்லாததால் சாகுபடி பரப்பு குறைந்தது. இந்த ஆண்டு விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். விலை உயரும் என்பதால் சிலர் இருப்பு வைக்க துவங்கியுள்ளனர் என்றனர்.