/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பாதிப்பு வன விலங்குகளால் பயிர்கள் சேதம் ஆவதால் விவசாயிகள் சோலார் வேலி, அகழி அமைக்க நடவடிக்கை தேவை
/
பாதிப்பு வன விலங்குகளால் பயிர்கள் சேதம் ஆவதால் விவசாயிகள் சோலார் வேலி, அகழி அமைக்க நடவடிக்கை தேவை
பாதிப்பு வன விலங்குகளால் பயிர்கள் சேதம் ஆவதால் விவசாயிகள் சோலார் வேலி, அகழி அமைக்க நடவடிக்கை தேவை
பாதிப்பு வன விலங்குகளால் பயிர்கள் சேதம் ஆவதால் விவசாயிகள் சோலார் வேலி, அகழி அமைக்க நடவடிக்கை தேவை
ADDED : ஜன 26, 2025 05:52 AM
போடி : தேனி மாவட்டத்தில் காட்டுப்பன்றி, காட்டுமாடு போன்ற வன விலங்குகள் மிளகு கொடி, ஏலம், கிழங்கு போன்ற விவசாய பயிர்களை சேதப்படுத்துவதால் விவசாயிகள் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். வன விலங்குகளை தடுக்க சோலார் மின் வேலி, அகழி அமைக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
மாவட்டத்தில் போடி அருகே குரங்கணி, முட்டம். முதுவாக்குடி, பிச்சாங்கரை, போடிமெட்டு, வடக்குமலை, அகமலை உள்ளிட்ட பகுதிகளில் 30 ஆயிரம் ஏக்கருக்கு மேல் காபி பயிரிட்டு உள்ளனர். இதனிடையே ஊடு பயிராக ஒங்கி வளர்ந்துள்ள மரங்களில் மிளகு கொடிகளை வளர்த்து வருகின்றனர். கொடியில் மிளகு நன்கு வளர்ந்து உள்ள நிலையில் காட்டுப் பன்றிகள் கூட்டம், கூட்டமாக தோட்டங்களுக்குள் உலா வந்து மிளகு கொடி, சேமக் கிழங்கு பயிர்களையும் வேரோடு சேதம் ஏற்படுத்தி வருகின்றன. இது போல் ஏல செடிகளை காட்டு மாடு உள்ளிட்ட வனவிலங்கு சேதம் ஏற்படுத்தி வருகின்றன. சில நாட்களில் விளைந்த மிளகு பறிக்க முடியாத அளவிற்கு தோட்ட பகுதிக்குள் செல்ல முடியாமல் விவசாயிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
வன விலங்குகளிடம் இருந்து பயிர்களை காக்கும் வகையில் அகழிகள் அமைக்கவும், 25 கி.மீ., தூரத்திற்கு சோலார் மின் வேலி அமைக்கவும் மாவட்ட நிர்வாகம், முதன்மை வன பாதுகாப்பு அலுவலருக்கு பரிந்துரை செய்யப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் திட்டம் செயல் படுத்தாமல் கிடப்பில் உள்ளன. இயற்கை சீற்றங்களால் அவதிப்படும் விவசாயிகள் வன விலங்குகளாலும் பாதிப்பு அடைந்து வருகின்றனர். சில நேரங்களில் வழி தெரியாமல் வரும் விலங்குகள் பாறையில் உருண்டு உயிர் பலியாகி வருகின்றன. வனப் பகுதியில் குடிநீருக்கு தண்ணீர் தேக்கத்திற்கான தடுப்பணைகள் இல்லாததால், தண்ணீரை தேடி வன விலங்குகள் தோட்ட பகுதிகளுக்கு வருகின்றன. இதனால் விவசாயிகள் பெரிய அளவில் விவசாயம் செய்ய முடியாமல் சிரமம் அடைந்து வருகின்றனர்.
வனவிலங்குகளிடம் இருந்து பயிர்களை காக்கும் வகையில் வனப்பகுதியை சுற்றி அகழி அமைக்கவும், 25 கி.மீ., தூரத்திற்கு சுற்றி சோலார் மின்வேலி அமைக்க மாவட்ட நிர்வாகம், முதன்மை வன பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.