/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பள்ளியில் உணவு திருவிழா, கண்காட்சி
/
பள்ளியில் உணவு திருவிழா, கண்காட்சி
ADDED : அக் 17, 2024 06:23 AM

கம்பம்: உலக உணவு திருவிழாவை முன்னிட்டு கம்பம் நாலந்தா இன்னோவேசன் பள்ளியில் மாணவர்கள் தயாரித்த வித விதமான உணவு வகைகளை பெற்றோர்களும், ஆசிரியைகளும் பார்வையிட்டனர்.
உலக உணவு தினம் ஆண்டுதோறும் அக்.16 ல் கொண்டாடப்படுகிறது.
அதை முன்னிட்டு நேற்று காலை கம்பம் நாலந்தா இன்னோவேசன் பள்ளியில் அப்துல் கலாம் பிறந்தநாள் விழா, உணவுத் திருவிழா கொண்டாடப்பட்டது. தாளாளர் விஸ்வநாதன் தலைமை வகித்தார். முன்னதாக பள்ளி வளாகத்தில் உள்ள அப்துல்கலாம் சிலைக்கு தாளாளர் தலைமையில் ஆசிரியைகள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். எல்.கே.ஜி. முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் 500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தத்தம் வீடுகளில் தயாரித்த வித விதமான உணவு வகைகளை காட்சிப் படுத்தினர்.
ஒவ்வொரு மாணவனும் தனது உணவு பாத்திரத்திற்கு அருகில் தான் தயாரித்த உணவில் உள்ள பொருட்கள், அவற்றால் உடல்நலத்திற்கு தீங்கு இல்லை, எந்தெந்த வயதினருக்கு எவ்வளவு கலோரி தேவை என்ற குறிப்பை வைத்திருந்தனர். அந்த உணவில் உள்ள விட்டமின்கள் பற்றிய விபரம் காணப்பட்டன. காரம், இனிப்பு, கேக் வகைகள், பனியாரம், இட்லி முதல் வெஜ் பிரியாணி வரை விதவிதமான சைவ உணவுகள் வைக்கப்பட்டிருந்தன.
அசைவ உணவுகள் இடம்பெறவில்லை. பெற்றோர்களும், ஆசிரியைகளும் சாப்பிட்டு பார்த்து பாராட்டினர். சிறந்த உணவுகளை தயாரித்த மூவர் பாராட்டப்பட்டனர்.
தலைமை ஒருங்கிணைப்பாளர் மலர்விழி, முதல்வர் மோகன் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
ஏற்பாடுகளை அலுவலக மேலாளர் விக்னேஷ், பள்ளி ஆசிரியைகள், பணியாளர்கள் செய்திருந்தனர்.