/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இரண்டாவது நாளாக விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம்
/
இரண்டாவது நாளாக விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம்
ADDED : ஆக 29, 2025 03:44 AM

தேனி: மாவட்டத்தில் நேற்று தேனி,கம்பம், உத்தமபாளையத்தில் 2வது நாளாக விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம் கோலாகலமாக நடந்தது.
விநாயகர் சதுர்த்தி விழா மாவட்டத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. சதுர்த்தி அன்று 986 இடங்களில் சிலைகள் வைத்து வழிபாடுகள் நடந்தன. நேற்று தேனி பொம்மையகவுண்டன்பட்டி சாலை பிள்ளையார் கோவிலில் இருந்து பெரியகுளம் ரோடு, நேருசிலை சிக்னல், மதுரை ரோடு வழியாக அரண்மனைப்புதுார் முல்லைபெரியாறு பாலம் வரை விசர்ஜன ஊர்வலம் நடந்தது. மதியம் ஹிந்து எழுச்சி முன்னணி சார்பில் வைக்கப்பட்டிருந்த சிலைகள், மாலை ஹிந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்டிருந்த சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டன. ஊர்வலத்தில் பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்தனர். செயற்கை யானை ஊர்வலத்தை பொதுமக்கள் ரசித்தனர்.
கம்பம் : உத்தமபாளையம் நகரங்களில் விநாயகர் ஊர்வலத்தை ஹிந்து முன்னணி , ஹிந்து எழுச்சி முன்னணி நிர்வாகிகள் நடத்தி வருகின்றனர்.
நேற்று கம்பத்தில் ஹிந்து முன்னணி சார்பில் அரச மரம் அருகில் இருந்து 61 சிலைகளும் , ஹிந்து எழுச்சி முன்னணி சார்பில் வடக்கு வட்டத்தில் இருந்து 21 சிலைகளும் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. வழிநெடுகிலும் பக்தர்கள் விநாயகரை வழிபட்டனர்.
முடிவில் விநாயகர் சிலைகள் முல்லைப் பெரியாற்றில் கரைக்கப்பட்டது. உத்தமபாளையத்தில் 40 சிலைகளும், ஒன்றிய பகுதியில் 15 சிலைகளும் சேர்த்து முல்லைப் பெரியாற்றில் 55 சிலைகள் கரைக்கப் பட்டது.
சின்னமனூரில் இன்று விநாயகர் ஊர்வலம் நடக்கிறது. பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
36 சிலைகள் கரைப்பு கூடலுார்: விநாயகர் சதுர்த்தி விழா ஹிந்து முன்னணி சார்பில் நடந்தது. புது பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட 36 இடங்களில் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. நேற்று மாலை அனைத்து சிலைகளும் கொண்டுவரப்பட்டு ஊர்வலமாக புறப்பட்டது.
ஹிந்து முன்னணி நகர செயலாளர் ஜெகன் தலைமையில், ஐந்து மாவட்ட விவசாய சங்க தலைவர் எஸ்.ஆர்.தேவர், வழக்கறிஞர் சங்க தலைவர் முத்துராமலிங்கம் துவக்கி வைத்தனர். பழைய பஸ் ஸ்டாண்ட், ரத வீதி, வழியாக காஞ்சிமரத்துறை சென்று முல்லைப் பெரியாற்றில் சிலைகள் கரைக்கப்பட்டன.
அகில இந்திய பார்வர்டு பிளாக் மாவட்ட இணை செயலாளர் மகேஸ்வரன், ஐந்து மாவட்ட விவசாய சங்க செயலாளர் ராஜீவ், த.மா.கா. மாவட்ட தலைவர் செல்வேந்திரன், வழக்கறிஞர் லலிதா, தென் மண்டல பொருளாளர் மலைச்சாமி, விவசாய சங்க துணை தலைவர் ராஜீவ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இன்ஸ்பெக்டர் வனிதாமணி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.